ஜெ. வழக்கில் இருந்து பவானிசிங் நீக்கமா? கர்நாடக அட்வகேட் ஜெனரல் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
பெங்களூரு: ஜெயலலிதா மேல் முறையீட்டு விசாரணையில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க கர்நாடக அட்வகேட் ஜெனரல், பவானிசிங், திமுக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது கர்நாடக ஹைகோர்ட்.
சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 வருட சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதி்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3பேர் தொடர்ந்து வழக்கு, ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்து வருகிறது.

சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரான நிலையில், மேல்முறையீட்டின்போதும் அவரே ஆஜராகிறார். ஆனால் இதற்கான அனுமதியை கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதியோ, அல்லது கர்நாடக அரசோ அளிக்கவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அனுமதியை பெற்று வந்து பவானிசிங் ஆஜராகிவருகிறார்.
அதிமுக அரசு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை, பவானிசிங்கை அரசு வக்கீலாக தொடர அனுமதித்திருப்பது சரியில்லை என்று திமுகவின் அன்பழகன் சார்பில் ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பவானிசிங் பல சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டவர் என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுவை சிறப்பு அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்த நிலையில், ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா முன்பு இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, பவானிசிங் அரசு வக்கீலாக தொடர்வது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கர்நாடக அட்வகேட் ஜெனரல், திமுக தரப்பு மற்றும் பவானிசிங் ஆகிய மூவருக்கும் உத்தரவிட்டார் நீதிபதி. நாளைக்கு இந்த பதிலை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications