முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் மரணம்.. ராஜீவ் காந்தியை எச்சரித்தவர்!
டெல்லி: முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் தனது 85வது வயதில் மரணமடைந்தார். ராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வரக் கூடாது, வந்தால் கொலை செய்ய்படுவார் என்று எச்சரிக்கை விடுத்தவர் பீஷ்ம நாராயண் சிங் என்பது நினைவிருக்கலாம்.
1989ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பீஷ்ம நாராயண் சிங். அ்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆளுநரராக இருந்த பர்னாலா திமுக ஆட்சியைக் கலைக்க பரிந்துரை கடிதம் அனுப்ப முடியாது என்று மறுத்திருந்தார். ஆனால் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த பர்னாலா பதவி விலகினார். அந்த இடத்திற்கு வந்தவர்தான் இந்த சிங்.
தனது பதவிக்காலத்தின்போது ராஜீவ் காந்திக்கு தமிழகத்தில் ஆபத்து இருக்கிறது. அவர் தமிழகம் வருவதைத் தவிர்க்க வேண்டும். வந்தால் கொலை செய்யப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தவர் பீஷ்ம நாராயண் சிங். இவரது பதவிக்காலத்தின்போது சர்ச்சைகளிலும் இவர் சிக்கத் தவறவில்லை.
பதவி ஓய்வுக்குப் பின் டெல்லியில் போய் செட்டிலானார் பீஷ்ம நாராயண் சிங். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் நீண்ட காலமாக உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில் நோய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு வயது 85.
இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தமிழ்நாடு தவிர அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.