தொழிலதிபருக்கு குபீர் பேராசை.. பெங்களூர் காஸ்ட்லி பங்களாவில் ஸ்மிதாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஒசக்கோட்டையில், தனது ஆசைக்கு இணங்க மறுத்த பெண் தொழிலாளியைத் தொழிலதிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த அந்தப் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற தொழிலதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு புறநகர் பகுதியான ஒசக்கோட்டை தாலுகா, சூலிபெலே பகுதியைச் சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. பெரும் பணக்காரரான இவர், அந்தப் பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள இடத்தில் ஒரு பிரம்மாண்ட பங்களாவில் வசித்து வந்தார்.

பங்களாவில் ஸ்மிதா
வீட்டில் பாதுகாப்புக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் 2 காஸ்ட்லியான நாய்களை அவர் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்களைப் பராமரிப்பதற்காக தனி ஆட்கள் தேவைப்பட்ட நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி என்பவரின் மனைவி ஸ்மிதா (47) என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
ஸ்மிதாவுடன் அதே ஊரைச் சேர்ந்த அலினா மற்றும் சின்னு ஆகிய 2 பெண்களும் அந்த பங்களாவில் வீட்டு வேலைக்காகச் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இவர்கள் மூவரும் அந்த பங்களாவிலேயே தங்கிப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
நாய்க்கு உணவை வைத்த ஸ்மிதா
கடந்த 3-ம் தேதி வழக்கம்போல ஸ்மிதா பங்களாவின் தோட்டத்தில் நாய்களுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீபக் கிருஷ்ணா, திடீரென ஸ்மிதாவை வீட்டின் உட்பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். உள்ளே சென்ற ஸ்மிதாவிடம், தீபக் கிருஷ்ணா பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தனது ஆசைக்கு இணங்குமாறு ஸ்மிதாவை அவர் கடுமையாக வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அவரது இந்த தவறான அணுகுமுறைக்கு ஸ்மிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பித்து வெளியே ஓட முயற்சித்தபோது, ஆத்திரமடைந்த தீபக் கிருஷ்ணா அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஸ்மிதாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். தலையில் பலமாக அடிபட்ட ஸ்மிதா, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
கொலை செய்துவிடுவேன்
ஸ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்ற வேலைக்காரப் பெண்களான அலினா மற்றும் சின்னு ஆகியோரை தீபக் கிருஷ்ணா கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். "இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் உங்களையும் கொலை செய்துவிடுவேன்" என்று அவர் மிரட்டியதால் அந்தப் பெண்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனாலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஸ்மிதாவை அவர்கள் மீட்டு, சூலிபெலேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்குச் சிகிச்சை பலனளிக்காத நிலையில், மேல் சிகிச்சைக்காக ஸ்மிதா கேரளாவில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை தீவிரம்
தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஸ்மிதாவின் கணவர் ஆண்டனி, திருச்சூர் போலீஸில் புகார் அளித்தார். கேரள போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சம்பவம் கர்நாடகாவில் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், வழக்கு சூலிபெலே போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், தீபக் கிருஷ்ணாவை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தீபக் கிருஷ்ணா மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு மதுபான விடுதியில் தகராறு செய்து, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட புகாரில் அவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போழத அவர் மீது கொலை வழக்கு மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பங்களாவில் நடந்த இந்த கொடூரக் கொலை சம்பவம் பெங்களூரு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!












Click it and Unblock the Notifications