போபால் குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து; 4 குழந்தைகள் பலியான சோகம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போபாலில் உள்ள கமலா நேரு அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை மையத்தில் திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டது.

முதலில் தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. முதல் கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்து மூன்றாவது மாடியில் ஏற்பட்டுள்ளது. இங்கு வரிசையாக ஐசியு வார்டுகள் அமைந்து உள்ளன. தீ விபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகிகள் தீயை அணைக்க போராடி உள்ளனர். அதேபோல் தீயணைப்பு வீரர்களும் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
4 தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது. உள்ளே நிறைய வேதிப்பொருட்கள் இருந்த காரணத்தால் தீயை அணைப்பது கஷ்டம் ஆகி உள்ளது.
தீ விபத்து காரணமாகவும், புகையில் சுவாசம் முட்டியும் 4 குழந்தைகள் இதில் பலியானார்கள். இன்னும் சில குழந்தைகளுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் 3 குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதேபோல் 4 பெண்களும் தீ காரணமாக காயம் அடைந்துள்ளனர்.

3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மேலும் 1 குழந்தை சிகிச்சை பலனின்றி அதிகாலையில் பலியானது. மரணம் அடைந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டு தனி விசாரணை கமிட்டி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இரவு 9.10 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மத்திய பிரதேசத்தை உலுக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications