கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்ப் பயன்படுத்திய டாக்டர்... ஒடிசாவில் பரபரப்பு!
புவனேஸ்வர்: ஒடிஸாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது, மருத்துவர் சைக்கிள் பம்ப் பயன் படுத்தப்படுத்தியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவில் சைக்கிள் பம்ப் உதவியுடன் பெண்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் பனார்பால். அங்குள்ள மருத்துவ மனையில் கடந்த 28-ம் தேதி கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் 56 பெண்களுக்கு கருத் தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மகேஷ் பிரசாத் ராத் என்ற மருத்துவர் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்தார்.
கருத்தடை முகாம் நடைபெற்ற மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடத்துவதற்கு தேவையான வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சாதாரண அறையில் வைத்தே பெண்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் மருத்துவர்.
பொதுவாக கருத்தடை அறுவைச் சிகிச்சையின்போது வயிற்றில் கார்பைன் டை ஆக்ஸைடின் அளவு சீராக இருக்க செய்ய ‘இன்சப் லேட்டர்ஸ்' கருவியை மருத்துவர்கள் பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பனார்பால் மருத்துவமனையில் அந்த வசதி இல்லாததால், மகேஷ் பிரசாத் சைக்கிள் பம்பை இன்சப்லேட்டர்ஸாக பயன்படுத்தியுள்ளார்.
இளைஞர் ஒருவர் சைக்கிள் பம்பில் காற்றடிக்க மகேஷ் பிரசாத் அறுவைச் சிகிச்சையை நடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அம்மாநில நாளிதழ்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதைக் கண்டு ஆவேசமடைந்த சமூக ஆர்வலர்களும், பாஜக தொண்டர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர் மகேஷ் பிரசாத் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளேன். கிராமப்புற மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருக்காது. எனவே ‘இன்சப்லேட்டர்ஸ்' கரு விக்குப் பதிலாக சைக்கிள் பம்பை பயன்படுத்துகிறோம், இதில் தவறில்லை' என விளக்கமளித்துள்ளார்.
ஆனால், கருத் தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்பை பயன்படுத்துவது ஆபத்தானது. பம்பின் லூப்ரி கென்ட்ஸ் பெண்களின் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது, அவர்களின் ரத்த நாளங்களில் காற்றுக் குமிழிகள் அடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்கள் வலுவடைந்து வருவதை அடுத்து, இச் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications