மரண அடி வாங்கிய நிதிஷ்.. கையிலெடுத்தார் தலித் வியூகம்
பாட்னா: லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜிதன்ராம் மஞ்சியை முதல்வராக்கியிருக்கிறார் நிதிஷ்குமார்.
லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களில்தான் வென்றது. இதைத் தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் பதவி விலகினார்.
இதை அம்மாநில எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. ஆனால் கட்சியின் மற்றொரு தலைவரான சரத்யாதவ், நிதிஷ்போகட்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். இருப்பினும் எம்.எல்.ஏக்கள் மீண்டும் நிதிஷையே முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.

நிதிஷ் பிடிவாதம்
ஆனால் தமது ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று நிதிஷ் உறுதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நிதிஷ்குமாருக்கு தரப்பட்டது.

அதிரடி முடிவு
இதனால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது? சரத் யாதவ், நரேந்திர நாராயண் யாதவ், பிஜேந்திர யாதவ், பிஜய் செளத்ரி, நாராயண்சிங் என பலரது பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்க அதிரடியாக நிதிஷ் ஒரு முடிவெடுத்தார்.

தலித்துக்கு வாய்ப்பு
தலித் சமூகத்தைச் சேர்ந்த மஞ்சியை முதல்வராக தேர்வு செய்து ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளார். அவர் நிதிஷ் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். அவரே இதை எதிர்பார்த்திருக்கவில்லைதான். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 12% தலித்துகளின் வாக்குகளை அப்படியே அள்ளிவிடலாம் என்பது நிதிஷின் கணக்கு.

தேர்தலுக்காகவே
இதற்காகவே மஞ்சியை தேர்வு செய்திருக்கிறார் நிதிஷ். அதுவும் லோக்சபா தேர்தலில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்ட மஞ்சியை முதல்வராக நிதிஷ் தேர்வு செய்திருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது அதிகாரத்தை பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்து தலித்துகளுக்கு கொடுத்தோம் என்று தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தாம் இந்த முடிவெடுத்ததாக கட்சி நிர்வாகிகளிடம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் நிதிஷ்குமார்.












Click it and Unblock the Notifications