"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு!
பாட்னா: இந்தியாவில் இப்படியும் ஒரு மாநிலமா என்று அனைவரும் கேவலமாக பேசும் அளவுக்கு பீகாரில் நிலைமை உள்ளது. சாதாரண பரீட்சையை பெரும் போர்க்களமாக மாற்றி வருகிறார்கள் அங்குள்ள பெற்றோர்கள் சிலர். பிள்ளைகளுக்குப் பிட் கொடுக்க அவர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் தடியடியும், போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடக்கும் அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது 10 மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் நடந்து வருகின்றன. பீகாரிலும் பத்தாவது வகுப்புப் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. ஆனால் வழக்கம் போல இதில் பெரும் அக்கப்போர் மூண்டுள்ளது.

தேர்வு எழுதும் தங்களது பிள்ளைகளுக்கு உதவியாக பிட் கொடுத்தும், காப்பி அடிக்க உதவியும் பெற்றோர்கள் தேர்வு மையங்களில் குவிந்து வருகிறார்கள். ஜன்னல்களில் தொற்றி நின்றபடி அவர்கள் செய்யும் அட்டகாசம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பெயர் ஒரே நாளில் கெட்டுப் போய் விட்டது.
வைஷாலி மாவட்டம் ஹாஜிப்பூர் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு பிட் கொடுத்து உதவுவதற்காக, அவர்களுக்கு வேண்டியவர்கள் ஏராளமானோர் குவிந்து ஜன்னல் வழியாக தொற்றி ஏறி ஸ்பைடர்மேன் போல காணப்பட்ட காட்சி நாட்டையே உலுக்கி விட்டது. முதலில் இதை போலீஸாரும் சரி, அதிகாரிகளும் சரி கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பீகார் மாநிலம் மீது நாட்டு மக்கள் முகச் சுளிப்பை வெளிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நேற்றும் இதேபோல நூற்றுக்கணக்கான பெற்றோர் கூடி பிட் தானம் செய்தனர். இதையடுத்து அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் முதலில் கூறினர். ஆனால் அவர்கள் போகவில்லை. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களைப் போலீஸார் கலைந்து செல்லச் செய்தனர்.
இதுபோல், போஜ்பூர் மாவட்ட தலைநகர் ஆராவில் உள்ள ஒரு தேர்வு மையத்திலும், காப்பி அடிக்க உதவுவதற்கு பலர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.












Click it and Unblock the Notifications