பீகார் தேர்தல்: பாஜகவிடம் இருந்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி ஓட்டம்! காங்கிரஸ்- ஆர்ஜேடி மும்முர பேச்சு!
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பீகாரில் பாஜக- ஜேடியூவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை கட்டமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தின.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் பாஜக- ஜேடியூ கட்சிகள், ஒருங்கிணைந்து சட்டசபை தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளன. ஜேடியூ தலைமையில் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என்று பாஜகவும் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி வெளியேறியது. பாஜக தலைமை தங்களை அவமதித்துவிட்டதால், கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதனிடையே, பீகாரில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- ஆர்ஜேடி கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவ் இன்று சந்தித்து பேசினார்.
பீகாரில், காங்கிரஸ்- ஆர்ஜேடி கட்சிகள் வலிமையாக இருந்தாலும் 2020-ம் ஆண்டு தேர்தலில் ஆர்ஜேடிதான் அதிக இடம் பெற்ற கட்சியாக உருவெடுத்தது. இதனால் ஆர்ஜேடி தலைமையின் கீழ்தான் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிறது அந்த கட்சி. ஆனால் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்களோ, சட்டசபை தேர்தலுக்கு பின்னர்தான் யார் முதல்வர் என முடிவு செய்வோம் என்கின்றனர். இதனால் பீகாரில் இந்தியா கூட்டணியிலும் பிளவு ஏற்படும் நிலைமை உருவானது. இதனையடுத்தே டெல்லியில் கார்கே, ராகுலுடன் தேஜஸ்வி யாதவ் இன்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னாவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும். 20 ஆண்டுகளாக பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் வறுமையின் பிடியில்தான் பீகார் இருக்கிறது. ஆகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications