பீகார் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சிக்கு பாஜக ஆதரவு
பாட்னா: பீகார் சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் ஜித்தன்ராம் மஞ்சிக்கு ஆதரவு தெரிவிக்க பாஜக முடிவெடுத்துள்ளது. இருப்பினும் மஞ்சி அரசில் பாஜக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது.
பாஜகவின் 87 சட்டசபை உறுப்பினர்களும் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அக்கட்சியின் சட்டசபை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாஜகவின் இந்த முடிவால், அக்கட்சியின் பெயர் கெட்டுப் போய் விடாதா என்ற கேள்விக்கு மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி பதிலளிக்கையில், இப்போதைக்கு நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவில்லை. நிகழ்காலத்தைப் பற்றி்த்தான் பார்க்கிறோம். ஒரு மகா தலித்துக்கு நிதீஷ் குமார் இழைத்த அவமரியாதை தோற்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்றார்.

இன்றைய கூட்டத் தொடரில் முதலில் இடம் பெறும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்க ஐக்கிய ஜனதாதளம் முடிவு செய்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மட்டும் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது தங்களது முகத்தை மூடியபடி அவர்கள் பங்கேற்பார்களாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மஞ்சி வெல்வது மிக மிக கடினமாகும். காரணம், வாக்கெடுப்பில் வெற்றி பெற 117 வாக்குகள் தேவை. அவரிடம் 12 பேர்தான் உள்ளனர். 3 சுயேச்சைகள் ஆதரவு தருகின்றனர். பாஜகவின் 87 பேரின் ஆதரவு கிடைத்தாலும் கூட அவரால் வெல்ல முடியாது. அதேசமயம், நிதீஷ் குமார் வசம் 128 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கட்சி மேலிட உத்தரவுப்படி பதவி விலக மறுத்த மஞ்சியை கட்சி மேலிடம் கட்சியிலிருந்து நீக்கியது. அவரது அமைச்சரவையிலிருந்து 20 அமைச்சர்கள் பதவி விலகினர். 7 அமைச்சர்கள் விலக மறுத்தனர். அவர்களையும் கட்சியை விட்டு ஐக்கிய ஜனதாதளம் நீக்கியுள்ளது. தற்போது சிறுபான்மை முதல்வராக மஞ்சி தொடர்ந்து வருகிறார். அவரை சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று அவர் சட்டசபைக் கூட்டத்தில் நிரூபிக்கவுள்ளார்.
இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் மஞ்சி அரசு தோற்கும் என்பது பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் பாஜகவின் இலக்கு அதுவல்ல, மாறாக மஞ்சி சார்ந்த மகா தலித் ஜாதியினரின் வாக்கு வங்கிதான். அந்த வாக்கு வங்கியானது பீகார் அரசியலில் முக்கியப் பங்கு வகி்ப்பதாகும். எனவே எதிர்காலத்தை மனதில் கொண்டு மகா தலித் சமூகத்தினரின் வாக்குகளை அள்ளும் நோக்கில்தான் அக்கட்சி மஞ்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
அதாவது மஞ்சியை வைத்து அவரது ஜாதியினரை வளைக்கும் திட்டம் இது. இந்த ஆண்டு கடைசியில் பீகாரில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. எனவே இப்போதிருந்தே ஜாதி ரீதியான வாக்கு வங்கிகளைக் குறி வைத்து செயல்பட ஆரம்பித்து விட்டது பாஜக.
அதேசமயம், ஐக்கிய ஜனதாதளம் நிதீஷ் குமார் தலைமையில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அது லாலு பிரசாத் யாதவுடனும் கை கோர்த்துள்ளது. இதற்குத் தோதாகத்தான் மஞ்சியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்ததால் இவ்வளவு குழப்பமாகி விட்டது.
கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே ஐக்கிய ஜனதாதளம் வெற்றி பெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து வி்ட்டு அப்பதவியில் மஞ்சியை உட்கார வைத்து விட்டு கட்சிப் பணியாற்றச் சென்று விட்டார். அதுதான் அவர் செய்த பெரிய தவறாகி விட்டது. இப்போது மஞ்சி, நிதீஷை கடுமையாக போராட வைத்து விட்டார்.












Click it and Unblock the Notifications