பீகார்: பிப். 20-ல் பெரும்பான்மையை மஞ்சி நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் உத்தரவு!
பாட்னா: பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி சட்டசபையில் வரும் 20-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாடி நேற்று நள்ளிரவில் உத்தரவிட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியைத் தழுவியதால் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். தம்முடைய ஆதரவாளராக இருந்த ஜிதன் ராம் மஞ்சியை நிதிஷ் முதல்வராக்கினார்.

அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் எதிர்ப்பு வலுத்து வந்தது. கடைசியில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவுடனும் மோதினார் மஞ்சி.
இதனைத் தொடர்ந்து ஜிதன்ராம் மஞ்சியை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களான சரத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஜிதன்ராம் மஞ்சியோ இந்த கோரிக்கையை நிராகரித்தார்.
அவர் கடந்த 7-ந் தேதி டெல்லி சென்றிருந்த நிலையில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மொத்தம் 111 எம்.எல்.ஏக்களில் 91 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டசபையின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் ஜிதன்ராம் மஞ்சி நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத்தை சந்தித்த நிதிஷ்குமார் தமக்கு மொத்தம் 130 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் மவுனம் காத்தார்.
இந்நிலையில் நிதிஷ்குமாரை சட்டசபை தலைவராக தேர்வு செய்ததை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிதிஷ்குமார் மாநில சட்டசபை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக செயல்பட நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் நிதிஷ்குமார் முதல்வராவதில் சிக்கல் எழுந்தது.
அதே நேரத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் நேற்று இரவு தமது ஆதரவு 130 எம்.எல்.ஏக்களுடன் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, தற்போதைய முதல்வர் மஞ்சி வரும் 20-ந் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 111 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு 87 உறுப்பினர்களும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு 24 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 5 உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.
சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 5 பேர் இருக்கிறார்கள். 10 இடங்கள் தற்போது காலியாக இருப்பதால் சட்டசபையின் தற்போதைய பலம் 233. சட்டசபையில் முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போது நிதிஷ்குமாரை ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏக்களுடன் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவரும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் நிதிஷ்குமாருக்கு ஆதரவு.
மஞ்சியை பாரதிய ஜனதா கட்சி ஆதரித்தால்தான் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். ஆனால் பாரதிய ஜனதாவோ தமது கட்சியின் நிலைப்பாட்டை சட்டசபையில்தான் தெரிவிப்போம் என்று கூறியுள்ளது. இதனால் பீகார் அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications