ஜப்பான் பெண் கயாவில் 20 நாட்களாக பலாத்காரம் – 2 சுற்றுலா கைடுகள் கைது
கயா: இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஜப்பானிய பெண் ஒருவரை பலாத்காரம் செய்த சுற்றுலா வழிகாட்டிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண், பீகார் மாநிலம் கயா நகரில் தங்கி புத்தர் கோவிலை பார்வையிட திட்டமிட்டார். அவரை அழைத்து செல்வதாக கூறி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 வழிகாட்டிகள் அணுகினர்.
ஆனால் அவர்கள் ஜப்பானிய பெண்ணை ஏமாற்றி பதேபூர் அருகில் உள்ள தாரோ கிராமத்துக்கு கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து 20 நாட்களாக பலாத்காரம் செய்தனர். அவர் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர்.
பீகாரில் இருந்து தப்பி கொல்கத்தா சென்ற அந்த ஜப்பானிய பெண் கடந்த 26 ஆம் தேதி அங்குள்ள போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொல்கத்தா போலீசார், கயா சென்று விசாரணை நடத்தி முதலில் முகமது சபீர் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 சுற்றுலா வழிகாட்டிகளையும் போலீசார் கைது செய்தனர்.