கன்னத்தில் 5 அறை.. உ.பி. பஞ்சாயத்தில் பலாத்கார குற்றவாளிக்கு அளிக்கப் படும் வினோத தண்டனை
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு தண்டனையாக குற்றவாளிகளின் கன்னத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் 5 அறை தர வேண்டும் என்ற வினோத தண்டனை தரப்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தை சேர்ந்த சண்டக் கிராமத்தில் கடந்த ஞாயிறன்று 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். யாரிடமும் இது தொடர்பாகக் கூறக் கூடாது என குற்றவாளி மிரட்டியதால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில், இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட அந்த குற்றவாளி மீண்டும் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து சிறுமி மூலம் நடந்த விவரங்களை அறிந்த பெற்றோர் இது தொடர்பாக மண்ட்வார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து தகவலறிந்த சண்டக் கிராம பஞ்சாயத்தார் மண்ட்வார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தங்களது பஞ்சாயத்தில் கூறி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதாக அவர்கள் போலீசில் உறுதியளித்துள்ளனர். இதற்கு போலீசாரும் உடன்பட்டதாகத் தெரிகிறது.
இதை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கிராமத்தில் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. அப்போது பஞ்சாயத்தார் குற்றவாளியின் கன்னத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 5 அறை அறைய வேண்டும் என்றும், பலாத்கார வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்றும் தீர்ப்பு கூறினர்.
பஞ்சாயத்தாரின் இந்த நடவடிக்கைக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஆனபோதும், போலீசில் புகார் பதிவு செய்தால் உங்கள் குடும்பம் கிராமத்தில் இருந்து தள்ளிவைக்கப்படும் என பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோரை பஞ்சாயத்தார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.