சோகமே வடிவான முகம்.. ஒரே நாளில் சரிந்த சாம்ராஜ்யம்! முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: 2000 ஆம் ஆண்டு முதல் ஒடிசா மாநில முதல்வராக பொறுப்பில் இருந்து வந்த நவீன் பட்நாயக், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி), காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. எனினும் பாஜக - பிஜேடி இடையே தான் நேரடி போட்டி நிலவியது. 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை நவீன் பட்நாயக் பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். கடந்த 2019ல் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 112 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் இருந்தது. இதனால் இந்த முறை ஆட்சியை பிடிக்க பாஜகவினர் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டனர்.
ஒடிசா தேர்தலுக்காக பாஜக தலைவர்கள் அதிக அளவில் அங்கு குவிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரம் என்றும், அரசியல் வாரிசு என்றும் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனைக் குறிவைத்து, ஒடிசாவை தமிழர் ஆள்வதா என பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆட்சி அமைக்க 74 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. பாஜகவுக்கு அடுத்தபடியாக ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களைப் பிடித்தது. மேலும் காங்கிரஸ் கட்சியா 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. இதை ஒடிசா மாநில பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். விரைவில் ஒடிசா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதல்வரைத் தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா முதல்வருக்கான ரேஸில் 6 பேர் உள்ளதாகத் தெரிகிறது.
ஒடிசா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, 24 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடித்தத்தை புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரகுபர் தாஸிடம் அவர் அளித்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பிஜு ஜனதா தளம் 5 முறை ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தோல்வியையே சந்தித்திராத நவீன் பட்நாயக், தொடர்ந்து 24 ஆண்டுகள் 90 நாட்கள் ஒடிசா மாநில முதலமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில் முதல் முறையாக நவீன் பட்நாயக்கின் சாம்ராஜ்ஜியம் சரிந்துள்ளது.
ஒடிசா மக்களவைத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிஜேடி படுதோல்வி அடைந்துள்ளதால் பிஜு ஜனதா தளம் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications