தொடரும் அரசியல் படுகொலைகள்: மே.வங்கத்தில் 12 மணி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு
Recommended Video
கொல்கத்தா: பாஜக தொண்டர்கள் படுகொலையைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் இன்று 12 மணிநேர முழு அடைப்புக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலின் போதும் மேற்கு வங்கத்தில் வன்முறைகள் வெடித்தன. அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக பாஜக மற்றும் இடதுசாரிகள் கைகோர்த்துள்ளன.
இதனால் பல இடங்களில் இருதரப்புக்கும் இடையே உக்கிர மோதல்கள் நடைபெற்றன. லோக்சபா தேர்தலில் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றது திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் அமைந்தது.

பாஜகவினர் படுகொலை
இந்நிலையில் வடக்கு 24 பர்கானாவில் 4 பாஜக தொண்டர்களை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் ஒன்றில் இருந்து பாஜக கொடியை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அகற்றியதால் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இப்படுகொலைகளை முன்வைத்து பாஜக தீவிர அரசியலில் இறங்கியுள்ளது.

அனுமதி மறுத்த போலீசார்
ஹூக்ளி தொகுதி பாஜக எம்.பி. லோகெத் சட்டர்ஜி, படுகொலை செய்யப்பட்டோரின் இறுதி சடங்கில் பங்கேற்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதேபோல் படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை பாஜக அலுவலகத்துக்கு கொண்டு செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை.

முழு அடைப்புக்கு அழைப்பு
இதனால் கொந்தளித்த பாஜகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, போலீசாருக்கு எதிராக பாஜக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்புவதால் அசம்பாவிதங்கள் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

பாஜக எச்சரிக்கை
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச்செயலர் ராகுல் சின்ஹா, இன்றைய நாளை கறுப்பு தினமாக கடைபிடிக்கிறோம். மேற்கு வங்க போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம் என்றார்.
|
சு.சுவாமி எச்சரிக்கை
இதனிடையே பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, மேற்கு வங்கத்தில் பாஜகவினரைப் போல வேடமணிந்த இடதுசாரிகள்தான் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்; கொல்கத்தாவில் உள்ள எனது வழக்கறிஞர் நண்பர்கள் இத்தகவலை தெரிவித்தனர். அதனால் பாஜகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கூறியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications