பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.. சந்திரபாபு நாயுடு அதிரடி
உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என அருண்ஜெட்லி கூறியது தவறானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார்.
ஹைதராபாத்: உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என அருண்ஜெட்லி கூறியது தவறானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார். மேலும் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது.
சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கூட்டணியில் இருந்தும் இன்று தெலுங்குதேசம் வெளியேறி இருக்கிறது. இதைப்பற்றி பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ஆந்திர மக்களின் உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என்று கூறினார்.
இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அதில் ''உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என அருண்ஜெட்லி கூறியது தவறானது. உணர்வுகளுக்காகத்தானே தெலுங்கானா பிரிக்கப்பட்டது. பொது மக்களின் உணர்வுகள் வலிமைமிக்கது.'' என்றுள்ளார்.
மேலும் ''சிறப்பு அந்தஸ்து பற்றிய அருண்ஜெட்லியின் அறிக்கை பொறுப்பற்றது. மாநில பிரிவின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.