தேர்தலில் வெற்றி பெற நிதிஷ் குமார் பரம எதிரி லாலுவை போய் நாடுவதா: சுஷில் குமார் மோடி
பாட்னா: ராஜ்யசபா தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்த்து தனது கட்சி வேட்பாளர்கள் 2 பேரை வெற்றி பெறச் செய்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாரை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த 19ம் தேதி 2 சீட்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியின் சார்பில் பவன் வர்மா மற்றும் குலாம் ரசூல் பால்யவி ஆகியோர் போட்டியிட்டார்கள். அவர்களை எதிர்த்து ரியல் எஸ்டேட் அதிபர் அனில் சர்மா மற்றும் சபிர் அலி ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டனர். சுயேட்சைகளுக்கு ஐக்கிய ஜனதாதளம் மீது அதிருப்தி கொண்டவர்களும், பாஜகவும் ஆதரவு அளித்தன.
இதற்கிடையே நிதிஷ் தனது பரம எதிரியான ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். அவரும் நிதிஷ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதள வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறுகையில்,
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் அரசியல் ரீதியாக நிதிஷ் தோல்வி அடைந்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கொள்கைகளை மறந்து லாலுவுடன் கை கோர்த்துள்ளார். அவர் தனது பரம எதிரியான லாலுவை அணுகியதன் மூலம் ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை அடுத்து ஐக்கிய ஜனதாதளத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications