பாஜக அரசின் கெடுபிடிக்கு பயந்து கம்பெனிகளை மூடும் சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா
டெல்லி: மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடித்து வரும் நிலையில், நடவடிக்கைகளுக்கு பயந்து சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா தனது நான்கு நிறுவனங்களை முற்றிலும் மூடிவிட்டார்.
சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா. இவர் லைப்லைன் அக்ரோடெக், கிரீன்வேவ் அக்ரோ, ரைட்லைன் அக்ரிகல்சர், பிரைம்டைம் அக்ரோ, பியூச்சர் இன்ப்ரா அக்ரோ, பெஸ்ட் சீசன்ஸ் அக்ரோ ஆகிய ஆறு நிறுவனங்களை நடத்தி வந்தார். இதில் முதல் நான்கு நிறுவனங்களை வத்ரா திடீரென மூடியுள்ளார். அடுத்த இரு கம்பெனிகளின் பெயர்களை மாற்றியுள்ளார். மேலும், இவற்றையும் மூட தேவையான நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார்.
கடந்த மே மாதம் வரையில் அனைத்து நிறுவனங்களுமே ஆக்டிவாக இருந்த நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்த நிறுவனங்களை மூடும் வேலையில் வத்ரா இறங்கியுள்ளார். மத்திய கார்பொரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஆவணங்களின் மூலம் இந்த தகவல்கள் தற்போது மீடியாக்களுக்கு தெரியவந்துள்ளன.
2012ல் தொடங்கப்பட்ட மேற்கண்ட நிறுவனங்கள், ஆண்டு வருமான கணக்கையோ, பேலன்ஸ் ஷீட்டையோ இதுவரை தாக்கல் செய்ததே கிடையாதாம். இந்த ஆறு நிறுவனங்களிலும் ராபர்ட் வத்ராதான் மேலாண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள தனது நிலங்களையும் அவசரமாக ராபர்ட் வத்ரா விற்பனை செய்து வருகிறார். இவ்விரு மாநிலங்களும் காங்கிரஸ் வசம் இருந்து சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு மாறியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.