மகாராஷ்டிரா, ஹரியானாவில் சாதனை வெற்றி! பாஜகவின் அடுத்த இலக்கு தென் மாநிலங்கள்
சென்னை: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல்களில் பெற்ற வெற்றியை தென் மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான முரளிதரராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. மேலும் காங்கிரசின் ஆட்சி முறையையும், அந்த கட்சியையும் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் வெறுத்துள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு உள்ள கட்சியாக பாஜக மாறியுள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் பாஜகவைப் பலப்படுத்துவதே எங்களின் குறிக்கோள். அதற்காகக் கடுமையாக உழைப்போம்.
தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக பாஜக அதிக வாக்குகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவைப் பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே எங்களின் குறிக்கோள். அதற்காக கிராம அளவில் கட்சியைப் பலப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்த இருக்கிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர்; சிறந்த நடிகர். அவரைப் போன்ற நல்லவர்கள் எங்களோடு இணைந்து பாஜகவைப் பலப்படுத்த முன்வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
சுப்பிரமணியன் சுவாமி பாஜக தலைவர்களில் ஒருவர். அவர் பல்வேறு விஷயங்களில் தலையிட்டு வருகிறார். நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகிறார். அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக பாஜகவின் கருத்தைக் கேட்டுத்தான் பாஜக மேலிடம் செயல்பட்டு வருகிறது.
புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது. இது உண்மையல்ல. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உயிர் காக்கும் மருந்துகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு முதலிதரராவ் தெரிவித்தார்.