மத்திய பிரதேச மேயர் தேர்தல்.. அதிர்ச்சியில் பாஜக! பழைய பன்னீர்செல்வமாக வந்த காங்கிரஸ்
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி மேயர் தேர்தலில் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 7 இடங்களில் பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநில மாநகராட்சிகளுக்கான தேர்தல் அண்மையில் 2 கட்டங்களாக நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன.
5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. புதுக்கோட்டையில் என்னாச்சு?
கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 16 மேயர் பதவிகளுக்கான தேர்தலில் 16 லும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஆனால், இம்முறை அக்கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.
5 இடங்களில் வென்ற காங்கிரஸ்
பாஜக தோல்வியடைந்த 7 இடங்களில் 5 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்று இருக்கிறது. ஒரு இடத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்றொரு இடத்தில் பாஜகவிலிருந்து பிரிந்து சென்று சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிபெற்று உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸுக்கு புத்துணர்ச்சி
அன்றிலிருந்து அம்மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் சரிவை சந்தித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த வெற்றி அக்கட்சிக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் லோக் சபா தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியிலும், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மாவின் சொந்த மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி, ஏ.ஐ.எம்.ஐ.எம்.
அத்துடன் ஆம் ஆத்மி மற்றும் அசதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று இருக்கின்றன. புர்ஹான்பூரில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் வேட்பாளர் 10,000 க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இந்த பகுதியில் வெறும் 388 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளார் ஷனாஸ் இஸ்மாயில் பாஜக வேட்பாளர் மாதுரி படேலிடம் தோல்வியடைந்தார்.
மிக மோசமான செயல்பாடு
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 11 இடங்களில் பாஜக 7 இடங்களிலும், 2 ஆம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 5 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநகராட்சித் தேர்தலில் கடந்த 20 ஆண்டுகளில் பாஜகவின் மிக மோசமான தோல்வியாக இது பார்க்கப்படுகிறது. கடந்த 1999, 2004 மாநகராட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு அக்கட்சி 3 மேயர் இடங்களில் வென்றது. அதன்படி கடந்த 23 ஆண்டுகளில் காங்கிரஸின் சிறப்பான செயல்பாடாக இது கருதப்படுகிறது.