அக்னிபாத் திட்டத்திற்கு தேர்தலே காரணம்.. பாஜகவை வெளுத்து வாங்கும் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மத்திய பாஜக அரசு அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அக்னிபாத் என்ற பெயரில் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்ற அழைக்கப்படுவார்கள். இவர் இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே சேவையில் இருப்பர். அதன்பின் 25 சதவிகித அக்னி வீரர்கள் மட்டும் 15 ஆண்டுகளுக்கு சேவையாற்ற தேர்வு செய்யப்பட்டு, மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் சம்பளத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன் மூலம் இந்திய ராணுவத்தில் ஒப்பந்த முறை கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஓய்வூதியம் இன்றி அக்னி வீரர்கள் வெளி வருவதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 17.5 வயதில் இருந்து 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்திய ராணுவத்தில் தேர்வு செய்யப்படுவர். இதனை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் ஹரியானா, தெலங்கானா, பீகார், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சில மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன.
அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்தநிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 4 ஆண்டுகள் வேலைக்காக 4 மாதங்கள் பயிற்சியளித்து பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 4 ஆண்டுகள் ராணுவ சேவைக்கு பின் அவர்களின் எதிர்காலம் என்ன? ராணுவத்தில் இருந்து வெளியே வந்து அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
Recommended Video
2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மத்திய பாஜக அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எனக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் கொள்கை. ஆனால் பாஜகவை போல் நிச்சயமற்றதாக அல்லாமல், அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பாக உணர வைப்பதற்காக நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.