பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் வேகமாக வளர்ச்சியடைகின்றன - மோடி பெருமிதம்
பலாசூர்: நாட்டில் பிற மாநிலங்களை விட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலம், பலாசூர் நகரில் உள்ள ஏய்ம்ஸ் அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியாதவது: நாட்டின் அனைத்து பகுதிகளும் மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும். வளர்ச்சியின் பலனில் நாட்டின் எந்த பகுதியும் விடுபடக்கூடாது.
அரசு நிர்வாகத்தில் மக்களும் பங்கேற்க வேண்டும். எனது அரசு ஏழைகளுக்கான அரசு ஆகும். எனது முயற்சிகள் எல்லாம் ஏழைகள் நலன் சார்ந்ததே. ஏழைகளின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு திட்டங்கள் வகுப்பது மிகவும் முக்கியம். வறுமையை ஒழிப்பதற்கு அறிவியல் பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும். இல்லையேல் வறுமையே தொடரும்.
பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என்னுடைய ஒரே மந்திரம் வளர்ச்சித்தான். நாட்டில் பிற மாநிலங்களைவிட பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்யாததால் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.