பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தாவை வீழ்த்த வியூகம்.. பார்த்து, பார்த்து வேட்பாளரை தேர்வு செய்யும் பாஜக
கொல்கத்தா: சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துள்ளார் மம்தா பானர்ஜி. பாஜக வகுத்த வியூகம், விடுத்த சவால் என அனைத்தையும் முறியடித்து திரினாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற காரணமாக விளங்கினார்.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் ஐக்கியமான முன்னாள் நண்பனும், இந்நாள் எதிரியுமான சுவேந்து அதிகாரியிடம் வெற்றியை பறிகொடுத்தார் மம்தா.

தேர்தலில் தோற்று விட்டதால் முதல்வர் பதவியை தக்க வைக்க வேண்டுமானால் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டிய கட்டாயத்தில் மம்தா உள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்த மம்தா வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருப்பதால் மம்தா பானர்ஜி வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் மம்தா அரசு மக்களுக்கு கொடுத்த நலத்திட்ட உதவிகள், நிறைவேற்றிய சிறப்பு திட்டங்கள், ஆளும் கட்சியின் பலம் ஆகியவை மம்தாவுக்கு வெற்றியை ஈட்டித்தரலாம். பவானிபூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்ற காங்கிரஸின் அறிவிப்பும் மம்தாவுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது.
பாஜகவை பொறுத்தவரை கடந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றிய போதிலும், பல்வேறு வியூகம், திட்டம் வகுத்தும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லையே என்று வருத்தத்துடன் இருக்கிறது. இருந்தபோதிலும் தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் மம்தாவை வீழ்த்துவதற்கு பாஜகவுக்கு கிடைத்த சிறந்த ஆயுதமாகும். இதில் வெற்றி பெற்று விட்டால் ''ஆட்சியைதான் பிடிக்க முடியவில்லை; முதல்வர் பதவியில் மம்தாவை இருக்க விடாமல் செய்து விட்டோம்'' என்ற திருப்தி பாஜகவுக்கு கிடைக்கும்.
இதற்காக மிக கவனமுடன் திட்டம் தீட்டி வருகிறது பாஜக. ஆளும் கட்சி என்ற பலம் ஒருபக்கம் இருந்தாலும், மக்கள் செல்வாக்குள்ள தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள மம்தா பானர்ஜியை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் கிடையாது. பலம் பொருந்திய தகுதியான, வேட்பாளரை நிறுத்தினால்தான் மம்தாவுக்கு போட்டியளிக்க முடியும் என்பதை பாஜக உணர்ந்தே உள்ளது. மம்தாவுக்கு எதிராக போட்டியிட 6 பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்து மாநில பாஜக, டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பி இருக்கிறது.
இந்த பட்டியலில் மூத்த பாஜக தலைவரும், மேகாலயா மற்றும் திரிபுராவின் முன்னாள் கவர்னருமான ததகதா ராய் பெயர் இருப்பதாக தெரிகிறது. இது தவிர மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிரியங்கா திப்ரேவால், பிஸ்வாஜித் சர்க்கார் ஆகியோர் பெயரும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கலவர வழக்கு சி.பி.ஐ விசாரணை வர செல்வதற்கு மிக முக்கிய காரணம் பிரியங்கா திப்ரேவால் ஆவார். தேர்தலுக்கு பிந்தைய கலவரம் தொடர்பாக மம்தா அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தொடர்ந்து அழுத்தம் கொடுத்தவர் பிரியங்கா திப்ரேவால்.
பிஸ்வாஜித் சர்க்கார் என்பவர் பாஜக தொண்டர் அபிஜித் சர்க்காரின் சகோதரர் ஆவார். இந்த அபிஜித் சர்க்கார் வாக்கு எண்ணிக்கையான மே 2-ம் தேதி நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர். அனுதாப ஓட்டுக்களை பெறுவதற்காக பிஸ்வாஜித் சர்க்காரரை மாநில பாஜக தேர்வு செய்து அனுப்பி இருக்கிறது. இதேபோல் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்ஐடி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரர்களில் பிஸ்வாஜித்தும் ஒருவராவார்.
இதேபோல் கடந்த தேர்தலில் பவானிபூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக இருந்த ருத்ரனில் கோஷும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த 6 பேரில் மம்தாவுக்கு மிகவும் போட்டியளிக்க கூடிய, மக்களின் ஆதரவு பெற்ற ஒருவரை வேட்பாளராக பாஜக தலைமை விரைவில் அறிவிக்க இருக்கிறது. பாஜகவின் வியூகம் மம்தாவை வீழ்த்த உதவுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications