சின்னப்புள்ளத்தனமாக பேசுகிறாரே "டயாபர் குழந்தை" ராகுல் காந்தி... பா.ஜ.க. பதிலடி
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது; டயாபர் அணியும் ஒரு குழந்தை மாதிரி இருக்கும் ராகுலுக்கு என்ன அறிவுரை சொல்வது? என்று பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பு 5.6 ஆக சுருங்கிவிடும் என்றெல்லாம் கிண்டலடித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் சித்தார்த்நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லலித் மோடிக்கு உதவியதாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மீது ராகுல் பழிசுமத்துகிறார். தன் மீதான வழக்குகளை சுமுகமாக முடித்து வைப்பதற்காக சோனியா காந்தியின் சகோதரி ரூ.500 கோடி பேரம் பேசியதாக லலித் மோடியே தற்போது குறிப்பிடுகிறார்.
இதற்கு ராகுல் காந்தியின் பதில் என்ன? அரசியலைப் பொருத்தவரை ராகுலின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. டயாபர் அணியும் ஒரு குழந்தைக்கு அறிவுரை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை.
ராகுலை ஒரு வல்லமை பொருந்திய தலைவராக காங்கிரஸ் முன்னிறுத்துவதால் அவருக்கு சில அறிவுரைகளைக் கூறிக்கொள்கிறோம். ஆளும் கட்சியை விமர்சியுங்கள். ஆனால், உரிய ஆதாரங்களுடன் அந்த விமர்சனத்தை முன்வையுங்கள்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2ஜி, நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் செய்வதிலேயே 10 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்பொழுதாவது ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுங்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் லலித் மோடி இயக்குவதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் ஒட்டுமொத்த நாட்டையே சிலர் "ரிமோட் கண்ட்ரோல்' மூலம் இயக்கினர். அதுபோன்ற முறை பாரதிய ஜனதாவில் எப்போதுமே கிடையாது.
இவ்வாறு சித்தார்த்நாத் சிங் கூறினார்.