தமிழை தமிழக எல்லையைத் தாண்டி கொண்டு சென்ற ஒரே கட்சி பாஜகதான்- பொன். ராதா
டெல்லி: தமிழ்நாட்டில், தமிழ், தமிழர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தியவர்களும், கட்சி நடத்துபவர்களும் இதுவரை, தமிழ் மொழியை, தமிழக எல்லையை தாண்டி, கொண்டு சென்றதில்லை. ஆனால், பா.ஜ.க அரசு தான் இந்த காரியத்தை செய்திருக்கிறது. முதல் முறையாக, நாட்டிலேயே தமிழ் புலவர் திருவள்ளுவருக்கு தான் இந்த சிறப்பு கிடைத்திருக்கிறது என்று மத்திய இணை அமை்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்லியில், நேற்று மத்திய கப்பல் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., டெல்லி தமிழ் சங்கம் மற்றும் பிற தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சாஸ்திரி பவனில் உள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
உலகப் பொதுமறையான திருக்குறளை வழங்கிய, திருவள்ளுவருக்கு பா.ஜ.க அரசு மிகப்பெரிய சிறப்பு செய்திருக்கிறது. அதற்கு காரணமாக இருந்ததற்காக, தமிழக பா.ஜ.க சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஸ்மிருதியிடம், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிகச் சிறந்த கவுரவத்தை, திருவள்ளுவருக்கு, மோடி அரசு வழங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், திருக்குறளை, ஆங்கிலம், இந்தியில் மொழிபெயர்த்து, புத்தகமாக வழங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
பள்ளிகளில் திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பாரதியார் பாடல்களை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்.
தமிழ்நாட்டில், தமிழ், தமிழர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தியவர்களும், கட்சி நடத்துபவர்களும் இதுவரை, தமிழ் மொழியை, தமிழக எல்லையை தாண்டி, கொண்டு சென்றதில்லை. ஆனால், பா.ஜ.க அரசு தான் இந்த காரியத்தை செய்திருக்கிறது. முதல் முறையாக, நாட்டிலேயே தமிழ் புலவர் திருவள்ளுவருக்கு தான் இந்த சிறப்பு கிடைத்திருக்கிறது. மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு உரிய சிறப்பு செய்யவும் முன்வந்திருக்கிறது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.