செய்த பாவம் தான் புற்றுநோய்க்கு காரணம்... அசாம் சுகாதாரத்துறை அமைச்சரின் வெட்கமில்லா பேச்சு!
முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாகவே புற்றுநோய் பரவுவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கவுஹாத்தி : முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாகவே புற்றுநோய் பரவுவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறி இருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநில கல்வி, நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா மக்கள் உயிரை அச்சுறுத்தும் புற்றுநோய்க்கு ஆளானதற்கு முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவமே காரணம் என்று கூறி இருந்தார். "இந்துக்கள் கர்மா மீது நம்பிக்கை உள்ளவர்கள் எனவே மனிதன் தற்போது அனுபவித்து வரும் துன்பங்களுக்கும் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைக்கும் தொடர்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.
மக்கள் செய்த பாவங்களால் ஏற்படும் வினையை தடுக்க முடியாது. பலரும் ஏன் இளம் வயதிலேயே ஒருவருக்கு புற்றுநோய் வருகிறது என்று வியக்கிறார்கள். ஆனால் அவர்களின் பின்னணி பற்றி ஆராய்ந்தால் தான் தெரியும், இது அவருக்கு விதிக்கப்பட்ட நிதி, அதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று கவுஹாத்தியில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் ஷர்மா பேசியுள்ளார்.
புற்றுநோய்க்கு காரணம்
இளம் வளதில் ஒருவருக்கு புற்றுநோய் வந்தாலோ அல்லது விபத்தில் அவர் உயிரிழந்தாலோ அதற்கு முன்ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவத்தைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் பாஜக அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் தப்ப முடியாது
தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்திற்கு கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள் ஏன் அதிக சம்பளம் பெற்றும் அரசுப் பள்ளியில் தங்களது உழைப்பை காட்டுவதில்லை. நீதி என்பது எங்குமே உள்ளது, முன் ஜென்ம பாவங்கள் நம்மை பாதிக்கும், அதில் இருந்து யாருமே தப்ப முடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள் என்றார் ஷர்மா.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
புற்றுநோய் பாதிப்பு குறித்த அமைச்சரின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் மனம் நோகும்படியாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஹிமாந்தா பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
2016ல் பாஜகவில் சேர்ந்தார்
2001 முதல் 2015 வரை காங்கிரஸ் கட்சியில் அசாமின் ஜலுக்பாரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஹிமாந்தா 2016ல் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் அவருக்கு நிதித்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.