அடடே ஆச்சரியம்! மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினார் பா.ஜ.க.எம்.பி. பாபுல் சுப்ரியோ!
கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) லோக்சபா எம்.பி. பாபுல் சுப்ரியோ இன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. அப்போது காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.
காலம் மாற காட்சிகளும் மாறின. இப்போது திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக மேற்கு வங்கம் உருமாறி இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சி இடத்தை பா.ஜ.க.பிடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு போய்விட்டன. இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டவர்கள் இப்போது பாரத் மாதா கீ ஜே அப்படியே பாஜகவினராக மாறிவிட்டனர். இதனால் மேற்கு வங்க அரசியலில் பாஜக அசைக்க முடியாத கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

கொத்து கொத்தாக கட்சி தாவல்
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்தவர்கள் பாஜகவுக்கு போவது இயல்பானதாகிவிட்டது. அதுவும் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கொத்து கொத்தாக மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாஜகவுக்கு தாவினர். அவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. அப்படி கட்சி மாறியவர்கள் வெற்றியும் பெற்றனர்.

தி.காங்-க்கு வந்த பாஜக எம்.எல்.ஏக்கள்
ஆனால் எப்படியும் பா.ஜ.க. ஆட்சி அமையும்; தாங்களும் அமைச்சர்களாகிவிடுவோம் என்ற அவர்களது கனவுதான் நிறைவேறவில்லை. சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜி வென்று 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். இதனையடுத்து பாஜகவுக்கு போன தலைவர்கள் மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கே திரும்பி வருகின்றனர். அதேபோல் பாஜக எம்.எல்.ஏக்கள் 4 பேர் இதுவரை திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பிவிட்டனர்.

பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ
இந்நிலையில்தான் பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ இன்று திரிணாமுல் காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார். 2014-ல் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுக்கு போனவர்தான் இந்த பாபுல் சுப்ரியோ. 2019-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.

திடீர் மனமாற்றம்
ஆனால் அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது பதவி இழந்தார் பாபுல் சுப்ரியோ. இதனால் வெறுத்துப் போன அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் மமதாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி, மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாபுல் சுப்ரியோ, வாய்ப்புகள் தேடி வந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதனால் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளேன் என்றார். பொதுவாக பிற கட்சிகளில் இருந்துதான் பாஜகவில் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் இணைவர். ஆனால் மேற்கு வங்கத்திலோ பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் ஜோதியில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications