மோடி கேமரா வச்சுட்டார்.. காங்.குக்கு போட்டா சிக்கிருவீங்க.. என்ன இப்படி பேசிட்டார் பாஜக தலைவர்!
பிரதமர் மோடி கேமரா வெச்சிருக்கார் என குஜராத் எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
அகமதாபாத்: "மோடி கேமரா வைச்சிருக்கார், நீங்க ஓட்டு போடவில்லைனா கண்டுபிடிச்சுருவாரு" என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
இன்னும் 6 கட்டங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக பிற மாநிலங்களில் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.
இதில் சில வைரல் பேச்சுக்களும் அடக்கம். அப்படித்தான் குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளார். இவர் பெயர் ரமேஷ் கட்டாரா! தாஹூத் தொகுதியில் உள்ள ஒரு தெருவில் வாக்கு கேட்டு போயிருக்கிறார்.
வாக்கு சாவடிகள்
அப்போது ஒரு வீட்டு திண்ணையில் எம்எல்ஏ உட்கார்ந்துவிட, அவரை சுற்றி ஒரு சின்ன கூட்டம் நிற்கிறது. அவர்களிடம் எம்எல்ஏ பேசியதாவது: "பிரதமர் மோடி வாக்கு சாவடிகளில் நிறைய காமிராக்களை பொருத்தி வைத்திருக்கிறார். நீங்க யாருக்கு ஓட்டு போடறீங்கன்னு அவருக்கு தெரிஞ்சிடும். யாராவது காங்கிரசுக்கு ஓட்டு போட்டால், அதுவும் தெரிந்துவிடும்.
பட்டனை அழுத்தணும்
அதனால பாஜக வேட்பாளர் ஜஷ்வந்த் சிங் பபோரின் போட்டோ அந்த சாவடியில் இருக்கும். அதுக்கு பக்கத்திலேயே தாமரை சின்னமும் மெஷின்ல இருக்கும். அதை பார்த்து பட்டனை அழுத்தணும். இதில் தப்பு எதுவும் நடந்திட கூடாது. ஏன்னா.. மோடி அங்கெல்லாம் காமிரா வைச்சிருக்கார்.
பார்த்துட்டே இருக்கார்
அதன் மூலம் நீங்க யாருக்கு ஓட்டு போடறீங்க, உங்க ஆதார் அட்டை, அதில் இருக்கிற உங்க போட்டோ.. எந்த பூத்தில் குறைவாக வாக்கு விழுது, யாரெல்லாம பாஜகவுக்கு ஓட்டு போடலை இப்படி எல்லாமே அவருக்கு தெரிஞ்சிடும். ஏன் சொல்றேன்னா.. டெல்லியில் இருந்து மோடி இதையெல்லாம் பார்த்து கொண்டிருப்பார். அப்பறம் உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்காது. அரசின் ஒரு உதவியும், திட்டமும் உங்களுக்கு வந்து சேராது" என்றார்.
களை கட்டும்
இப்போது இந்த எம்எல்ஏ பேசிய பேச்சுதான் டாப் வைரல்! அது மட்டுமல்ல... காங்கிரசுக்கு லட்டு மாதிரி ஒரு மேட்டர் கிடைத்துள்ளது. இதை வைத்தே பிரச்சாரம் இனி களை கட்டும் என தெரிகிறது.