ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வாய்ப்பில்லை.. பாஜக எம்எல்ஏக்கள் அமளி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வருகின்றன. இதே கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக வைத்து தேர்தலை சந்தித்த தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவந்த நிலையில், இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவுக்கு குறித்து கடந்த 2019க்கு முன்னர் வரை பாஜக கடுமையான விமர்சனங்களை எழுப்பி வந்தது. ஆனால், இது எங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என்று அம்மாநில அரசியல் கட்சிகள் கூறி வந்தன. இப்படி இருக்கையில் திடீரென 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சிறப்பு சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. அரசியல் தலைவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அங்கு என்ன நடக்கிறது? என்பது குறித்து வெளி உலகிற்கு கொஞ்ச நாட்கள் வரை தெரியாமலேயே இருந்தது.

அப்படியே ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் கூட இது குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். இருப்பினும் எதற்கும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
ஆனால் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் இதை விட்டுக்கொடுக்கவும் இல்லை. மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை மீட்டு தரும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று ஒரே மூச்சாக இருந்துவிட்டன. இந்த சலசலப்புகளுக்கு இடையில்தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், சிறப்பு அந்தஸ்தை மீட்டு தருவோம் என்று வாக்குறுதியளித்து தேர்தலை எதிர்கொண்ட தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி, பெரும் வெற்றி பெற்றது.
தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வளவுதான், பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் சீட்டிலிருந்து குதித்து எழுந்து, தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என்று அமளியில் ஈடுபட தொடங்கினர். கடந்த மூன்று நாட்களாக பாஜக எம்எல்ஏக்கள் அமளி செய்து வருகின்றனர். சிறப்பு அந்தஸ்து ஒருபோதும் திரும்ப வழங்கப்படாது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால் தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏக்கள் இதை அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுப்பதாக இல்லை. எனவே, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் சலசலப்பு எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications