தமிழகத்தில் 'மெர்சல்'.. கர்நாடகாவில் 'திப்பு சுல்தான் ஜெயந்தி'.. பாஜக ரொம்ப பிஸி
திப்பு சுல்தான் ஜெயந்திக்கு என்னை அழைக்காதீர்கள் என்று பா.ஜ.க எம்.பி ஹெக்டே தெரிவித்துள்ளார்.
பெங்களூரூ : இந்த ஆண்டு நடக்க இருக்கும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு என்னை அழைக்காதீர்கள் என்று பா.ஜ.க எம்.பி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியவர் திப்பு சுல்தான். இவரது பிறந்த நாளான நவம்பர் 10ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகிறது.
இந்தவிழாவைக் கொண்டாடக்கூடாது என பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திப்பு சுல்தான் இந்துக்கொள்கைகளுக்கு எதிரானவர். பல மக்கள் அவரால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
இந்நிலையில் வரும் 10ம் தேதி நடக்க இருக்கும் எந்த ஒரு விழாவிற்கும் தன்னை அழைக்க வேண்டாம் என்று பா.ஜ.க எம்.பி அனந்தகுமார் ஹெக்டே முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர். அவரது விழாவிற்கு என்னை அழைக்க வேண்டாம். அழைப்புக்கடிதத்திலும் என் பெயரை போட வேண்டாம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.