"குட்கா போட்டாலும் ஓகே.. சரக்கு அடிச்சாலும் ஓகே.." நீர் மேலாண்மை கூட்டத்தில்.. பாஜக எம்பி பரபர
இந்தூர்: தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து பாஜக எம்பி ஒருவர் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
வேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றம் என்பது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதனால் பல மோசமான பேரிடர்களும் ஏற்படுகிறது.
குறிப்பாகப் பருவம் தவறிப் பெய்யும் மழை என்பது பொதுமக்களுக்குப் பாதிப்பைத் தருகிறது என்றால், வேளாண்மையையும் கூட அதைப் பாதிக்கிறது.
மலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலில் அமைச்சருக்கு தண்ணீர்.. குன்னூரில் சர்ச்சை
நீர் மேலாண்மை
இந்தப் பிரச்சினைகளைக் கையாள வேண்டி இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம். பருவநிலை மாற்றம் ஒரு பக்கம் என்றால் நீரை எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவதும் மற்றொரு பிரச்சினையாக எழுந்துள்ளது. இப்படி அதிகப்படியான நீரை வீணாக்கினால், ஜீரோ டே எனப்படும் நீரில்லா தினம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. நினைத்துப் பாருங்கள்..! நீரே இல்லையென்றால் எப்படி ஒரு நாளை கடக்க முடியும் என.
சிக்கனம் தேவை
எனவே, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அப்படித்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரேவா பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தண்ணீரைப் பாதுகாப்பது குறித்துக் கூறியுள்ள கருத்துகளைத் தான் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
குட்கா சாப்பிடுங்கள்
அந்தக் கூட்டத்தில் பேசிய ஜனார்தன் மிஸ்ரா, "நீங்களே பாருங்கள்.. உங்களைச் சுற்றி எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.. நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.. அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. குட்கா சாப்பிடுங்கள், மதுபானம் குடியுங்கள், எந்தவொரு போதைப் பொருளையும் கூட எடுத்துக் கொள்ளுங்கள்.. அது பிரச்சினை இல்லை. ஆனால் தண்ணீரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அதுதான் முக்கியம்.
நீர் வரி
எதாவது ஒரு அரசு நீர் வரியைத் தள்ளுபடி செய்கிறோம் என்றால்.. அதை ஒப்புக் கொள்ளாதீர்கள். நீருக்கான வரியை நாங்கள் செலுத்துகிறோம். அதற்குப் பதிலாக மின் கட்டணம் உள்ளிட்ட இதர விஷயங்களைத் தள்ளுபடி செய்யச் சொல்லுங்கள்" என்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேவாவின் கிருஷ்ணராஜ் கபூர் பகுதியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தான் அவர் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்,
நெட்டிசன்கள்
இந்த வீடியோவை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவர் பேசியது என்னவோ நீர் மேலாண்மை மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது பற்றித்தான் என்றாலும் கூட குட்கா மற்றும் மதுபானத்தை எடுத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரே இதை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது சரியானது இல்லை எனப் பலரும் சாடியுள்ளனர்.
முதல்முறை இல்லை
அதேநேரம் மிஸ்ரா இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை.. அவ்வப்போது தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை அவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இவர் வெறும் கைகளால் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது நினைவுகூரத்தக்கது.