"ரூ.15,000 கோடியாமே".. 717 டாஸ்மாக்கை மூடுவதால் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு தெரியுமா?
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற 2வது நாளில் மாநிலத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை 2 வாரத்திற்குள் மூட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். தமிழக அரசை எடுத்து கொண்டால் டாஸ்மாக் மது விற்பனை பெரிய வருமானமாக உள்ளது. இந்நிலையில் தான், 717 டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் கடன் அளவு என்பது ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது தமிழக அரசின் கடன் தொகை 10 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை செயல்படுத்த கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்று பதவியேற்பு விழாவிலேயே பொதுமக்களிடம் கூறினார். அதோடு கஜானாவை காலி செய்து விட்டு திமுக அரசு சென்றதாக குற்றம்சாட்டினார்.
717 டாஸ்மாக் மூடல்
இதற்கிடையே தான் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 2வது நாளில் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இதில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு வரவேற்பு பெற்றுள்ளது.
டாஸ்மாக் வருமானம்
தமிழகத்தை எடுத்து கொண்டால் முக்கிய வருவாய் ஆதாரமாக 2 வழிகளில் வருகிறது. ஒன்று டாஸ்மாக் மதுவிற்பனை. இன்னொன்று பத்திர பதிவுத்துறை . இந்த 2 துறைகளும் கடந்த 2025-26ம் நிதியாண்டில்ரூ.75,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி வழங்கி உள்ளது. இதில் டாஸ்மாக் வருமானம் தான் அதிகம். டாஸ்மாக்கில் இருந்து மட்டும் ரூ.50,000 கோடியும், பத்திரப்பதிவு துறையில் இருந்து ரூ.25,500 கோடியும் கிடைத்துள்ளது.
எவ்வளவு வருமானம் குறையும்?
இப்படி பெரிய அளவில் வருமானம் ஈட்டும் நிலையில் முதல்வர் விஜய் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட அறிவித்துள்ளார். இதன்மூலம் டாஸ்மாக் வருமானம் குறைய உள்ளது. இது மாநில அரசின் வருவாயை குறைக்க உள்ளது. அதன்படி 717 டாஸ்மாக் கடைகளை மூடினால் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் அரசுக்கு குறையும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுக்கு 15,000 கோடி
இதுபற்றி மாநில நிதி துறையின் முன்னாள் தலைமை கணக்காய்வாளர் ஏ. மோகன் கூறுகையில், ''தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஆண்டுக்கு சுமார் ரூ.15,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படலாம். இழப்பீட்டை ஈடுகட்ட அரசு கலால் வரி மற்றும் வாட் வரியை அதிகரிக்கும் நிலை வரலாம். அதோடு வருவாய் இழப்பை தவிர்க்க பிரீமியம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விற்கும் எலைட் கடைகளை விரிவுபடுத்தலாம். ஆன்லைன் மதுபான விற்பனையை ஒரு கூடுதல் வருவாய் ஆதாரமாக ஆராயலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications