இடஒதுக்கீட்டு எதிர்ப்பு பேச்சால் தோல்வி- ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக பா.ஜ.க. எம்.பி.க்கள் "கலகக் குரல்"
பாட்னா: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு பேச்சுதான் பீகாரில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச் செய்தது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பீகார் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சி மூத்த எம்.பி.யான ஹூம்தேவ் நாராயண் யாதவ் கூறியுள்ளதாவது:

பீகார் மண்ணின் அடிப்படையை பலரும் புரிந்து கொள்ளவில்லை. பீகார் மக்கள் தங்கள் மீதான பொருளாதார ஒடுக்குமுறைகளை விட சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை அதிகம் எதிர்த்து போராடியவர்கள்.
இந்த மக்கள் லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியை எதிர்கொண்டனர். அதேபோல் உயர்ஜாதியினரின் ஒடுக்குமுறைகளையும் சந்தித்தனர். உயர் ஜாதியினர் ஆதிக்கம் தலை தூக்கினால் நீங்கள் அனைவரும் அடிமைகளாகிவிடுவீர்கள்; உங்கள் கவுரவம், சுயமரியாதை போய்விடும் என்று லாலு பிரசாத் யாதவ் பிரசாரம் செய்தார்.
சமூக உரிமைகள், சமூக சமத்துவம் ஆகியவை நிலைக்க வேண்டும் என்பதற்காக பீகாரின் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரணியாக திரண்டுவிட்டனர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சுக்கு பிரதமர் விளக்கம் கொடுத்தார்தான்.. ஆனால் அவர் மிகவும் தாமதமாக கொடுத்தார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விமர்சனத்தை தேர்தலில் லாலுவும் நிதிஷும் விவாதப் பொருளாக்கிவிட்டனர். இதை பாரதிய ஜனதா கட்சியால் தடுக்க முடியாமல் போனது.
பீகார் மக்களைப் பொறுத்தவரை சங்க பரிவாரத்தின் அடிமையாகத்தான் பாரதிய ஜனதாவைப் பார்க்கிறார்கள். சங்க பரிவாரம் கட்டளையிடுவதைத்தான் பா.ஜ.க. செய்யும் என்றே நம்புகின்றனர். அதனால் மோகன் பகவத்தின் பேச்சையும் பா.ஜ.க. பின்பற்றும் என நம்பினர்.
இடஒதுக்கீட்டில் கை வைக்கமாட்டோம்... உறுதியாக ஆதரிப்போம் என்றெல்லாம் பாரதிய ஜனதாவும் பிரதமர் மோடியும் கூறினார்கள்.. ஆனால் பீகாரின் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் அதை நம்பவே இல்லை.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் எங்கே தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்துவிடுவார்களோ என மக்கள் அச்சப்பட்டனர். பீகாரில் 1978ல் கர்பூரி தாகூர் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 26% இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
கர்பூரி தாகூர் கொடுத்த அந்த இடஒதுக்கீட்டு உரிமையை பா.ஜ.க. பறித்துவிடும் என அச்சப்பட்டனர் பிற்படுத்தப்பட்ட மக்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியது சரியான தருணம் அல்ல.. உத்தரப்பிரதேசம், பீகாரில் இடஒதுக்கீட்டு விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாகும்.
ஒரு வேலையை செய்யும் போது இடம், நேரம், ஆள் பார்த்து செய்ய சொல்கிறது பகவத் கீதை. லோக்சபா தேர்தலின் போது பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரணியாக திரண்டிருந்தனர். சட்டசபை தேர்தலில் இந்த ஒற்றுமை துண்டு துண்டாக சிதறிப்போனது.
ஜாதிய ரீதியாக வாக்குகள் ஒன்று திரட்டப்பட்டன. பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களும் இடஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்படுமோ என அச்சப்பட்டனர்.
மக்கள் ஜாதிய ரீதியான பிரச்சனையில் கண்ணை மூடிக் கொண்டுதான் பார்ப்பார்கள். லாலு கங்கையில் குதிக்க சொன்னால் ஏன் என்று கேட்காமல் அவருடைய ஆதரவாளர்கள் குதித்துவிடுவார்கள்.
இந்த கள யதார்த்தத்தை பாட்னாவில் உட்கார்ந்து கொண்டு 'வியூகம்' வகுத்த பா.ஜ.க. தலைவர்கள் உணரவில்லை. அவர்கள் ஒரு கற்பனையான உலகில் பறந்து கொண்டிருந்தனர். அவர்கள் கொஞ்சம்கூட கள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவே இல்லை.
இவ்வாறு ஹூம்தேவ் நாராயண் யாதவ் கூறினார்.
மற்றொரு எம்.பி.யான அஸ்வினிகுமார் சுபே கூறியதாவது:
பீகார் தேர்தலில் இடஒதுக்கீடு என்பது பிரச்சனையாக்கப்பட்டதுதான் பா.ஜ.க.வின் தோல்விக்கு காரணம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பேச்சால்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் குஜராத் இடஒதுக்கீட்டு பிரச்சனைக்காக கருத்து தெரிவித்திருந்தாலும் பீகாரில் அது விஸ்வரூபமெடுத்துவிட்டது. அதை தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையாக தாக்குதலாக மக்கள் பார்த்தனர்.
இதற்கு பாரதிய ஜனதாவால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் எங்களது வாக்குகள் சிதறிப்போனது.
ஹிமாச்சல் முன்னாள் முதல்வரும் எம்.பி.யுமான சாந்த குமார் கூறுகையில், டெல்லி சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் அதற்கான காரணங்களை உரிய முறையில் அலசி ஆராய பா.ஜ.க. தவறிவிட்டது. டெல்லி தோல்வியைத் தொடர்ந்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி சுய பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இதனால்தான் இந்த தோல்வியை பீகாரில் எதிர்கொள்ள நேரிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications