மைசூர் கோவிலில் ‘காஞ்சிபுரம் பட்டு’ சாத்திய சித்தராமையா- புது சர்ச்சை- மைசூர் சில்க் புறக்கணிப்பாம்!
மைசூர்: கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் 'காஞ்சிபுரம் பட்டுப்புடவை' சாத்தி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் வழிபாடு நடத்தியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ2,000 வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கிறார்.

இதற்காக நேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் மைசூர் வருகை தந்தனர். பின்னர் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருவரும் வழிபாடு நடத்தினர். அப்போது சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு "காஞ்சிபுரம் பட்டு" புடவை சாத்தி வழிபாடு நடத்தப்பட்டது. அத்துடன் ரூ2000, மஞ்சள், குங்குமம், வளையல்கள், தேங்காய், வாழைப்பழம, 'நந்தினி' நெய், மல்லிகை பூ மற்றும் ரூ2,000 திட்டத்தின் விளக்க அறிக்கை ஆகியவையும் அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் என்ன சர்ச்சை என்கிறீர்களா? ஒரு ப்ளாஷ் பேக் கதையே இருக்குங்க..
கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது மே 9-ந் தேதி அதாவது வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு டிகே சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் சென்று வழிபாடு நடத்தினர். அப்போது தனியார் நிறுவன தயாரிப்பு நெய்யை அம்மன் சன்னதியில் வைத்து தரிசனம் செய்தார். கர்நாடகாவில் குஜராத்தின் அமுல் பால் நிறுவனத்தை பாஜக நுழைக்கிறது; கர்நாடகாவின் நந்தினி பால் நிறுவனத்தை அழிக்கப் பார்க்கிறது பாஜக என காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வந்தது. இதனால் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு ஏன் தனியார் தயாரிப்பு நெய் கொடுத்தது காங்கிரஸ்? நந்தினி பால் நிறுவன தயாரிப்பு நெய்யை கொடுக்க வேண்டியதுதானே? என பாஜக பதிலடி கொடுத்திருந்தது.
தற்போது மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு தமிழ்நாட்டின் 'காஞ்சிபுரம் பட்டு' சாத்தியதையும் பாஜக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பாஜக தலைவர்கள் கூறுகையில், அன்று 'நந்தினி' பால் நிறுவனத்துக்காக குரல் கொடுத்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இன்று கர்நாடகாவின் மைசூர் சில்க் அல்லது பிரியதர்ஷினி கூட்டுறவு பட்டு சேலைகளில் ஒன்றை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சாத்தி இருக்க வேண்டியதுதானே? என கேள்வி எழுப்பினர்.
அடேங்கப்பா! எப்படி எல்லாம் சர்ச்சை!












Click it and Unblock the Notifications