உபி, உத்தரகாண்டில் முதல்வர்கள் யார்… முடிவெடுக்கக் கூடியது பாஜக ஆட்சிமன்றக் குழு
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர்கள் யார் என்ற முடிவெடுப்பதற்கான பாஜக ஆட்சிமன்றக் குழு இன்று டெல்லியில் கூடியது.
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக அம்மாநில முதல்வர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் கூடியது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 6 மணியளவில் ஆட்சி மன்றக் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
312 தொகுதிகளுடன் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று உத்தரப்பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, மாநில பாஜக துணைத் தலைவர் தினேஷ் சர்மா, எம்.பி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சத்பால் மகராஜ் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளார்.
பாஜகவின் ஆட்சிமன்றக் குழு தற்போது கூடியுள்ள நிலையில், விரைவில் உபியிலும், உத்தரகாண்டிலும் யார் முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது உறுதியாகிவிடும்.