விவசாயிகளின் கஷ்டத்திற்கு... மம்தாவின் ஈகோவே காரணம்... மே. வங்கத்தில் ஜே பி நட்டா குற்றச்சாட்டு
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஈகோ காரணமாகவே மாநிலத்திலுள்ள 70 லட்சம் விவசாயிகளால் பிரமதரின் கிஷான் திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் ஜே பி நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரைகளை ஜனவரி மாதமே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ், இந்த முறை வெற்றி பெற பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது. அதற்கு ஏற்றவாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் பாஜக பக்கம் வந்துகொண்டிருப்பதால், அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்,
மம்தாவின் ஈகோ
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, "மம்தா பானர்ஜியின் ஈகோ காரணமாக மாநிலத்திலுள்ள சுமார் 70 லட்சம் விவசாயிகள் பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 26 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்திற்காகப் பதவி செய்துள்ளனர். மம்தா பானர்ஜி இது தன்னால்தான் நடந்தது எனக் கூறுகிறார். பால் கெட்ட பிறகு என்ன செய்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை" என்றார்.
விவசாயிகளுடன் மதிய உணவு
மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள விவசாயி ஒருவருடன் மதிய உணவு உண்பதை ஜே பி நட்டா வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்த முறை சுமார் 4000 ஆயிரம் விவசாயிகளுடன் சேர்ந்து தனது மதிய உணவை ஜே பி நட்டா எடுத்துக்கொண்டார். விவசாயிகளின் நலனிற்காகவும் அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்காகவுமே மோடி அரசு தொடர்ந்து உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
35 லட்சம் விவசாயிகள்
முன்னதாக ஜனவரி மாதம், மேற்கு வங்காள விவசாயிகளைக் கவரும் வகையில் நிருதா கிருஷக் சுரக்ஷா அபியான் என்ற பிரச்சாரத்தை ஜே பி நட்டா தொடங்கினார், இது குறித்துப் பேசிய அவர், "தற்போது வரை இந்தப் பிரச்சார இயக்கத்தில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை இணைந்து கொண்டுள்ளனர்" என்றார்.
யாத்திரை
இதுவரை சுமார் 30 ஆயிரம் கிராமங்களில் இந்தப் பிரச்சார பயணம் நடைபெற்றுள்ளது என்றும் இருப்பினும் 40 ஆயிரம் கிராமங்களை இத்திட்டத்தில் இணைப்பதே தங்கள் நோக்கம் என்றும் நட்டா தெரிவித்தார். தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து பாஜக ஐந்து மிகப் பெரிய யாத்திரைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் முதல் யாத்திரையை ஜே பி நட்டா தொடங்கி வைக்கவுள்ளார்.