குடலசங்கமம் கோயிலுக்குள் அமித்ஷா வழிபாடு... பசவன்னாவை மட்டும் கடனுக்கென வழிபட்டது ஏன்?
குடலசங்கமம் கோயிலுக்கு சென்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வழிப்பட்டார். ஆனால் பசவன்னாவை மட்டும் தூரத்திலிருந்து வழிபட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூர்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குடலசங்கமம் கோயிலுக்கு சென்று வழிபட்ட நிலையில் பசவன்னாவை மட்டும் தூரத்திலிருந்து வழிபட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக போராடி வருகின்றன. இந்த நிலையில் இரு கட்சிகளும் மாநிலத்தில் அதிக அளவில் வசிக்கும் குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்களை கவர பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தலுக்காக பெங்களூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா புனித தலமான குடலசங்கமத்தில் உள்ள சங்கமதநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். ஆனால் அதை சுற்றியுள்ள லிங்காயத்துகளின் கோயில்களுக்கு சென்று பார்வையிடவில்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதே சமயம் பசவன்னா கோயிலை அவர் தூரத்திலிருந்து வழிபட்ட சம்பவம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. லிங்காயத்துக்களின் வழிபாட்டு தலங்களுக்கு சென்றால் அங்குள்ள லிங்காயத்துக்கள் என்ற தனி மதத்திற்கு ஆதரவாக உள்ள சாமியார்கள் அதுகுறித்து மனு அளிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அவர் லிங்காயத்துகள் தொடர்பான இடங்களை தவிர்த்தார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் கட்சி சார்பில் இதுகுறித்து கேட்டபோது, மாநிலத்தில் முக்கியமான இடங்களை பார்வையிட வேண்டும் என்று போதிய வழிகாட்டுதலுடன் திட்டமிட பாஜக தலைவர்கள் யாரும் இல்லை. முன்னாள் அமைச்சர் லட்சுமண் சாவடி மற்றும் சில உள்ளூர் தலைவர்கள் மட்டுமே இருந்ததால்தான் லிங்காயத்துகள் தொடர்பான இடங்களுக்கு அவரால் செல்ல இயலவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications