முட்டி மோதிய லாலுவை நம்பாத பாஜக... நம்பிக்கைக்குரிய கூட்டணி தலைவராக மீண்டும் நிதிஷ்?
ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் பேரம் பேசிய லாலுவை நிராகரித்துவிட்டது பாஜக. இப்போது நிதிஷுடன் கை கோர்க்கிறது பாஜக.
பாட்னா: தமது குடும்பத்தினர் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக பாஜகவுடன் கை கோர்க்க லாலு பிரசாத் முயற்சித்து பார்த்தார்... ஆனால் லாலுவை நிராகரித்துவிட்டு எப்போதும் எங்களது நம்பிக்கைக்குரிய கூட்டணி தலைவர் நிதிஷ்குமார் என மீண்டும் பாஜக அரவணைக்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 17 ஆண்டுகள் இருந்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். 2014 லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து கூட்டணியை முறித்தார் நிதிஷ்.
அப்போது நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசுக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் இதே மெகா கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைத்தது. லாலுவின் மகனுக்கு துணை முதல்வர் பதவி தந்து ஆட்சியில் அமர்ந்தார் நிதிஷ்குமார்.

பாஜகவுடன் பேரம் பேசிய லாலு
ஆனால் லாலு குடும்பத்தினர் மீதான வழக்குகளை டெல்லி மெல்ல தூசு தட்ட தொடங்கியது. உடனே லாலு பிரசாத் யாதவ், பாஜகவுடன் திரைமறைவு பேரத்தை தொடங்கினார். நிதிஷ்குமார் அரசைக் கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்பதுதான் அது.

லாலுவை ஏற்காத பாஜக
இதை பாரதிய ஜனதா கட்சி ஏற்கவில்லை. மாறாக லாலு குடும்பத்தினர் மீதான வழக்குகள் விஸ்வரூபமெடுத்தன. இதனால்தான் லாலுவின் மகன் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நெருக்கடி கொடுத்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.

நிதிஷ்- லாலு கூட்டணி விரிசல்
இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிதிஷ்குமார் பகிரங்க ஆதரவு தெரிவித்தார். இது நிதிஷ்-லாலு கூட்டணியில் விரிசலை அதிகரித்தது.

நிதிஷ் ராஜினாமா
இதன் உச்சமாக இப்போது முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்திருக்கிறார். நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில் பாஜக வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடும். பீகாரில் அரசியல் காலச் சக்கரம் எப்போதும் நிதிஷ்குமாரை சுற்றித்தான் கடந்த 20 ஆண்டுகாலமாக ஓடிக் கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications