இந்து மதத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாசம் செய்துவிட்டனர்.. துவாரகா சங்கராச்சார்யா பரபரப்பு
இந்துத்துவத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாசம் செய்துவிட்டது என்று குஜராத்தில் உள்ள துவாரகா பீடத்தின் சங்கராச்சார்யா சொரூபானந்த சரஸ்வதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
அஹமதாபாத்: இந்துத்துவத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாசம் செய்துவிட்டது என்று குஜராத்தில் உள்ள துவாரகா பீடத்தின் சங்கராச்சார்யா சொரூபானந்த சரஸ்வதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
முக்கியமாக சங்கராச்சார்யாக்களில் ஒருவராக கருத்தப்படும் சொரூபானந்த சரஸ்வதி அளித்த பேட்டியில், ''பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் இந்து மதத்திற்கு நிறைய கேடு விளைவித்துவிட்டது. முக்கியமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்திற்கு இந்துத்துவம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. அவருக்கு இப்படி ஒன்றும் தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது'' என்றுள்ளார்.
மேலும் ''இரண்டு அமைப்புகளும் இந்துத்துவம் மீது மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள். மக்களுக்கு இடையே வேற்றுமையை உருவாக்கி பதட்ட நிலையை உருவாக்கி உள்ளனர். இது பெரிய ஆபத்தை உருவாக்கும்'' என்று கூறியுள்ளார்.
முக்கியமாக ''மோகன் பாகவத்திற்கு இந்து திருமணம் என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அதை எதோ ஒப்பந்தம் என்று அவர் பேசுகிறார். இந்து திருமணம் என்பது இரண்டு மனங்கள் இணைவது. இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்கிறார்.அப்போது இங்கிலாந்தில் இரண்டு இந்துக்களுக்கு பிறந்த குழந்தை இந்து கிடையாதா?'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் ''பாஜக பசுக்களுக்கு காவலாக இருப்பது போல நடிக்கிறது. ஆனால் அந்த அரசுதான் அதிகமாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. 370வது சட்ட பிரிவை காஷ்மீரில் இருந்து நீக்கினால் அந்த பகுதி மக்கள் மிகவும் பலனடைவார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் மத்திய அரசு அப்படிப்பட்ட நல்ல விஷயங்களை செய்வதில்லை'' என்றுள்ளார்.
கடைசியாக ''அரசு வாக்குறுதி அளித்த 15 லட்சம் பணத்தை கொடுக்கவில்லை.இன்னும் ராமர் கோவில் கட்டவில்லை. முக்கியமாக இதுவரை கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அடுத்த தேர்தலுக்கு இப்போதே வாக்குறுதி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்'' என்று வன்மையாக சாடி பேசியுள்ளார்.