பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், இரண்டும் பெண்களின் முன்னேற்றத்தை முற்றிலுமாக வெறுக்கிறது: ராகுல் காந்தி பேச்சு
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இரண்டும் பெண்களின் முன்னேற்றத்தை முற்றிலுமாக வெறுக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
ஷில்லாங் : பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இருவருமே இந்தியா முழுக்க ஒற்றைச் சிந்தனையை நிறுவ முயற்சிக்கிறார்கள் அதுபோலவே, பெண்களின் முன்னேற்றத்தையும் முற்றிலும் வெறுக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை மேகாலயா மாநிலத்தில் துவங்கி உள்ளார்.
மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இருவரும் இந்தியா முழுக்க கூட்டாட்சி தத்துவத்தைச் சீரழித்து ஒற்றைச் சிந்தனையை நிறுவ முயற்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை நிறுவுவதன் மூலம் அவர்களின் கலாச்சாரம் , பண்பாடு, வாழ்வியல் முறை, மொழி ஆகியவற்றை அழித்து அதன் மூலம் இந்தியா முழுவதையும் ஒரே தத்துவத்தை நிறுவப்பார்க்கிறார்கள்.
ஒருவேளை பாஜக மேகாலயாவில் ஆட்சி அமைத்துவிட்டால் படிப்படியாக மேகாலயாவை இந்து நிலப்பரப்பாக்கி விடுவார்கள். அதை எதிர்த்துப் போராட மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், பெண்களின் முன்னேற்றத்தை பாஜக அரசும், ஆ.எஸ்.எஸ் அமைப்பும் முற்றிலுமாக வெறுக்கிறது. அவர்களின் திட்டங்களும், செயல்பாடுகளும் மீண்டும் பெண்களை வீட்டிற்குள்ளே முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதைப் போல இருக்கிறது.
நம் நாட்டில் சமீப காலங்களாக பெண்கள் அனைத்து துறைகளும் சாதனை படைத்து வருகிறார்கள். இதை விரும்பாத பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மீண்டும் பெண்களை அடிமைப்படுத்தவே முனைகிறது.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து படி நிலைகளும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலோ, பாஜகவிலோ அப்படி ஒரு நிலை இருக்கிறதா என்று மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.