வீடுவீடாக இலவச “மருதாணி” சர்வீஸ்-பாஜகவின் 34ஆவது ஆண்டுவிழா “பிளான்”
அகமதாபாத்: பாஜகவின் 34 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் மகளிர் அணியினர் வீடுவீடாக சென்று மருதாணி இட்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி தோன்றிய 34 ஆவது ஆண்டு தினம் நாளை "விஜய் சங்கல்ப் திவாஸ்" என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி பாராளுமன்ற தேர்தலின் போது பாஜகவின் பூத் ஏஜெண்ட்டுகளாக செயலாற்றவுள்ள சுமார் 6 லட்சம் தொண்டர்களுடன் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகிறார். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக "எஸ்.எம்.எஸ்" எனப்படும் குறுஞ்செய்தி மூலம் தகவல்களை அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அன்றைய தினத்தை தங்கள் பகுதி வாக்காளர்களுடன் பாஜக தொண்டர்கள் செலவிடுவார்கள். அப்போது கட்சியின் கொள்கைகள் பற்றியும், மோடியின் செயலாற்றல் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அவர்கள் விளக்கிக் கூறுவார்கள்.
பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் மருதாணி போடும் மெஹந்தி கோன்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று குறைந்தபட்சம் 10 இல்லத்தரசிகளின் கரங்களிலாவது பாஜகவின் தேர்தல் சின்னமான "தாமரை" யை வரைய வேண்டும் என்று பாஜக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.