ராகுல் காந்தியை கட்டிப்பிடித்தால் எங்களுக்கு விவாகரத்து ஆய்ரும்.. பாஜக எம்பி நக்கல்!
பாஜகவினர் ராகுல் காந்தியை கட்டிப்பிடித்தால், அவர்களுடைய மனைவி விவாகரத்து செய்துவிடுவார் என பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியைக் கட்டிப்பிடித்தால் அவர்களுடைய மனைவிகள் அவர்களை விவாகரத்து செய்துவிடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள் என பாஜக எம்பி நிஷிகந்த் துபே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, மத்திய அரசையும் பிரதமர் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி வெறுப்பை பரப்புகிறார் என்றும் ஆனால் தான் மோடி மீது அன்பு கொண்டிருக்கிறேன் என்று கூறி பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து கை குலுக்கினார். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பேச்சை பலதரப்பினரும் பாராட்டினர்.
இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ்காரர்கள் ராகுல் காந்தியின் வழியில் கட்டிப்பிடித்து பிரச்சாரம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், பாஜக எம்பிகள் என்னைக் கண்டால் கட்டிப்பிடித்துவிடுவேன் என்று பயந்து 2 அடி பின்வாங்குகிறார்கள் என்று கூறி பாஜகவைக் கிண்டல் செய்தார்.
இந்நிலையில், பாஜக எம்பி நிஷிகந்த் துபே இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கூறுகையில், "எங்களுடைய கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி கட்டிப்பிடித்தால் அவர்களுடைய மனைவிகள் அவர்களை விவாகரத்து செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். மேலும், அவர்கள் 377 பிரிவு சட்டத்தையும் தெரிந்து வைத்துள்ளார்கள் என்று கூறினார்.
அதோடு ராகுல் காந்தி திருமணம் செய்துகொண்டால் நாங்கள் அவரை கட்டிப் பிடிப்போம் என்று நிஷிகந்த் துபே கூறினார்.