கண்மணி அன்போடு .... 1.2 கோடி குடும்பங்களுக்கு ‘ஓட்டு’ கேட்டு லெட்டர் போடும் பாஜக!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக, தலைநகரில் உள்ள 1.2 கோடி குடும்பங்களுக்கு தங்களது தேர்தல் திட்டங்களைக் கடிதங்களாக அனுப்பிப் கொண்டிருக்கிறது பாஜக.
டெல்லி சட்டசபைத் தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, டெல்லியில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுவரை எந்தக் கட்சியும் செய்யாத புதிய வகைப் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டுள்ளது. அதாவது டெல்லியில் வசித்து வரும் 1.2 கோடி குடும்பங்களுக்கும் அக்கட்சி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி அனுப்பி வருகிறது.
பாஜகவின் அக்கடிதத்தில், மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒன்பது மாத வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி மற்றும் உள்ளூர் வேட்பாளரின் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு, ஊழலற்ற டெல்லி, 24 மணி நேர மின்சாரம், குடிநீர், நல்ல சாலைகள், மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நல்ல வசதிகள், முதலிய பா.ஜ.க.வின் தேர்தல் திட்டங்கள் பற்றியும் இந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கடிதங்கள் 5 ஆம் தேதி வாக்காளர்களின் வீடுகளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications