ஜம்மு காஷ்மீரில் பாஜக....பாகிஸ்தானுக்கு ஆப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இடங்களில் வென்றிருப்பது நிச்சயம் பாகிஸ்தானுக்கு கெட்ட செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் பாஜக எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் கிடைக்காவிட்டாலும் கூட இதுவரை இல்லாத அளவிலான குறிப்பிடத்தக்க லாபத்தை அக்கட்சி பெற்றுள்ளதே மிகப் பெரிய விஷயம்தான். அந்த வகையில் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளது பாஜக.

அம்மாநிலத்தில் திருப்திகரமான இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் காஷ்மீரைத் துண்டாட நினைக்கும் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கும்,. பிரிவனைவாத தலைவர்களுக்கும் அது அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது என்பது உண்மை.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து பாஜகவும், அதன் தலைமையும், பிரதமர் மோடியும் ஆரம்பத்திலிருந்தே அடுத்தடுத்து காய் நகர்த்தி வந்தனர். காஷ்மீருக்கு பிரதமர் மோடி விஜயம் செய்தார். கார்கிலுக்குப் போனார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை வெள்ளம் சூறையாடியபோது நேரில் சென்று அந்த மாநில மக்களைச் சந்தித்தார்.
இப்படி அடுத்தடுத்து காஷ்மீர் மீது மோடியும், அவரது கட்சியும் காட்டிய பாசமும், பரிவும் அம்மாநில மக்களிடையே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பாஜகவால் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்றாலும் கூட முக்கிய கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இணையான இடங்களை அது பிடித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும். இரு கட்சிகளுமே அங்கு சம நிலையில் உள்ளன. இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் ஆகியவை வருகின்றன.
எனவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது பாஜக தவிர்க்க முடியாத ஒரு முக்கியக் கட்சியாக மாறியுள்ளது. அதை விட முக்கியமாக இந்தியாவின் ஒரே முஸ்லீம் மாநிலமாக கருதப்படும் ஜம்மு காஷ்மீரில் இந்துத்துவா கட்சி என்று பார்க்கப்படும் பாஜக அதிக லாபத்தை அடைந்திருப்பதும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது பாஜகவுக்குக் கிடைத்த லாபம் என்பதை விட மோடி மாஜிக்குக்குக் கிடைத்த வெற்றியாகவே பாஜகவினரால் கூட பார்க்கப்படும். மோடி அலை ஓயவில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாக பாஜகவினரும் உரிமை கோருவார்கள்.
இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக இவ்வளவு அதிக இடங்களைப் பெற்றதில்லை. எனவே அந்த வகையில் பாஜகவுக்கு காஷ்மீர் தேர்தல் திருப்பத்தைக் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்ட நெடிய மோதல்களின் மைப் புள்ளியாக திகழ்ந்து வருவது இந்த மாநிலம்தான். அந்த மாநிலத்தில் இந்துக் கட்சியாக வர்ணிக்கப்படும் பாஜக இவ்வளவு பெரிய லாபத்தை சம்பாதித்திருப்பது கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய கெட்ட செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.
பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அமைதி, செழுமை, மதச்சார்பின்மை என்று சில முக்கியமான அம்சங்களை இந்த மாநில மக்களிடையே செய்த பிரசாரத்தின்போது மோடி திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்
பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய செக் வைக்க மோடிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சோனிபட்டில் உள்ள ஜின்டால் சர்வதேச விவகாரப் பள்ளியின் டீன் ஸ்ரீராம் சுந்தர் செளலியா கூறுகையில், முஸ்லீம்களுடன் நிச்சயம் நட்பு ரீதியாக மோடியால் பேச முடிகிறது, பழக முடிகிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை அவரால் திட்டவட்டமாக கூற முடிகிறது, புரிய வைக்க முடிகிறது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை அவர் புரிய வைத்துள்ளார். தீவிரவாதம், பயங்கரவாதம், தனிமைப்படுத்தப்பட்டது என பல பிரச்சினைகளில் சிக்கியுள்ள காஷ்மீர் இந்தியாவின் ரத்த நாளமாக இருப்பதை அவர் உணர வைத்துள்ளார் என்றார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இதுவரை 4 போர்கள் நடந்துள்ளன. இதில் 3 போர்கள் காஷ்மீரை மையமாகக் கொண்டவையாகும். இந்த போர்களில் காஷ்மீரில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீிரில் கிடைத்துள்ள முக்கிய இடம், பல மாற்றங்களுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை. கடந்த 2008 தேர்தலில் இங்கு பாஜகவுக்கு வெறும் 11 இடங்களே கிடைத்தன. இந்த தேர்தலில் 50 இடங்களை அது எதிர்பார்த்தது. ஆனால் அதில் பாதி இடங்களை அது கைப்பற்றும் நிலையில் உள்ளது.
இதுவரை இங்கு ஆளும் கட்சியாக இருந்து வந்த தேசிய மாநாடு இன்று மோசமான நிலைக்குப் போய் விட்டது. கடந்த முறை இங்கு அக்கட்சி ஆட்சியமைத்தது. ஆனால் இந்த முறை அது ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது.
காஷ்மீர் மக்களின் ஏக போக பிரதிநிதியாக திகழ்ந்து வந்த நிலையை தேசியமாநாட்டுக் கட்சி இழந்து விட்டது. கிட்டத்தட்ட 67 ஆண்டு கால காஷ்மீர் வரலாற்றில் பெரும்பாலான ஆண்டுகளை இந்தக் கட்சி தனது வசம் வைத்திருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. முதல்வர் உமர் அப்துல்லா மீதான நம்பிக்கை மக்களிடையே வெகுவாக குறைந்து விட்டதையே இது காட்டுகிறது.
குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் காஷ்மீரை புரட்டிப் போட்ட கடும் வெள்ளத்தின்போது உமர் அரசு சரியான முறையில் நிவாரணப் பணிகளை செய்யவில்லை என்று மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இப்படி சிறுகச் சிறுக சேர்ந்த வந்த அதிருப்தி அலை இன்று பாஜக பக்கம் ஆதரவு அலையாக திரும்பிப் போய் விட்டது. அதில் பாதியை மக்கள் ஜனநாயகக் கட்சி சாதகமாக்கிக் கொண்டதால், தேசிய மாநாடு கட்சி தேய்ந்து போய் விட்டது.
யார் ஆட்சி அமைக்கிறார்களோ, இந்த முறை காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து, பாகிஸ்தானின் வாலாட்டுதலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முயல வேண்டும் என்பதே அமைதியை விரும்புவோரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications