25 ஆண்டுகளாக இடைவிடாமல் முயற்சிக்கும் மேகாலயாவில் 3 இடங்களை தாண்ட முடியாத பாஜக
மேகாலயாவில் 25 ஆண்டுகளாக பாஜக பகீர முயற்சியும் மேற்கொண்டும் அதிகபட்சம் 3 இடங்கள்தான் கிடைத்திருக்கிறது.
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக இடைவிடாமல் போட்டியிட்டு வரும் பாஜக அதிகபட்சமாக 3 இடங்களை தாண்டியது இல்லை.
திரிபுராவில் 4 ஆண்டுகால உழைப்பின் பயனை பாஜக அறுவடை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்களை வளைத்துப் போட்டு அதன் வாக்கு வங்கியை நோகாமல் மடை மாற்றிவிட்டது பாஜக.
ஆனால் மேகாலயா மாநிலத்தின் கதையோ வேறு... அங்கு 25 ஆண்டுகாலமாக பல சட்டசபை தேர்தல்களை பாஜக சந்தித்து கொண்டே வருகிறது. ஆனால் அதிகபட்சம் 3 இடங்களைத்தான் பாஜகவால் பெற முடிந்திருக்கிறது.

1993-ம் ஆண்டு முதல் போட்டி
மேகாலயாவில் 1993-ம் ஆண்டு 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. ஒரு இடத்திலும் வெல்லவில்லை பாஜக. 14 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது.

3 இடங்களை வென்ற பாஜக
1998-ம் ஆண்டு மேகாலயா சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 3 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. இதுதான் அதிகபட்சமாக மேகாலயாவில் பாஜக வென்ற இடங்கள்.

பாஜக படுதோல்வி
2003-ம் ஆண்டு 2 தொகுதிகள், 2008-ம் ஆண்டு 1 தொகுதி-ல் பாஜக வென்றது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் பாஜக எந்த தொகுதியிலும் வெல்லவில்லை.போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் பறிகொடுத்தனர்.

வென்ற கதை இதுதான்
தற்போதைய தேர்தலில் பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் இந்த 2 பேருமே சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். தேர்தலுக்கு முன்புதான் பாஜகவில் ஐக்கியமாகினர். கால் நூற்றாண்டாக பாஜகவும் எவ்வளவோ முயற்சித்து பார்க்கிறது மேகாலயாவில்... ஆனால் எதுவும் சாதகமாக இல்லை அந்த கட்சிக்கு.












Click it and Unblock the Notifications