பாஜகவினர் "குடிப்பதற்கு" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்!
பாஜகவினர் குடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை வழங்கியுள்ளார்.
டெல்லி: பாஜகவினர் மேற்கத்திய ஆடைகளை அணிய கூடாது என்றும் கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாஜக அமைச்சர்கள் மேற்கத்திய ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக இந்திய பருவநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும். மேற்கத்திய ஆடைகள் வெளிநாட்டினரால் திணிக்கப்பட்டவை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி , யாரும் மது குடிக்கக் கூடாது. எனவே கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை பாஜக தலைமை உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Western dress is a foreign imposed slavishness. BJP should make it of party discipline for Ministers to wear Indian climate friendly clothes
— Subramanian Swamy (@Swamy39) December 26, 2017
நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் நடைபெற்ற பண்டிட் மதன் மோகன் மால்வியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என்று நேற்றைய டுவீட்டில் சுவாமி கூறியிருந்தார்.
Article 49 of Const directs alcohol drinks be banned. While I am not for penal action, BJP should make as part of party discipline.
— Subramanian Swamy (@Swamy39) December 26, 2017
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு இந்தியா இன்னும் அடிமையாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தியில் எதற்கு ராமர் கோயில் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் பேச சுவாமியை பல்கலைக்கழகம் அழைத்தது.
பின்னர் அந்த நிகழ்ச்சியை அந்த பல்கலைக்கழகம் ரத்து செய்தது. இதற்கு சுவாமி, ஜேஎன்யூ பல்கலைக்கழகம் எனது சித்தாந்தங்கள் இளைஞர்களை கவரும் என்பதால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்டவற்றை பாஜக அதிரடியாக செய்து வரும் நிலையில் அந்த கட்சிக்கே இதை உடுத்தக் கூடாது, இதை உண்ணக் கூடாது என்று சுவாமி அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.