காங்கிரஸுக்கு ஓட்டு போட்டதற்காக சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு... பாஜக ஆதரவாளரின் வெறிச்செயல்!
ஜாஜர்: ஹரியானாவில், காங்கிரஸுக்கு ஓட்டு போட்டதற்காக சகோதரரை பாஜக ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 12ந் தேதி ஹரியானாவில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. பல இடங்களில் பாஜக மற்றும் காங்கிரஸார் இடையே மோதல் எழுந்தது. இந்த நிலையில், ஜாஜர் அருகே உள்ள சய்லானா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா. இவர் பாஜக ஆதரவாளர். லோக்சபா தேர்தலின்போது பாஜகவிற்கு ஆதரவாக தீவிர களப்பணி ஆற்றி இருக்கிறார்.

தனது ஒன்றுவிட்ட சகோதரர் ராஜா என்பவரிடம் பாஜக வேட்பாளருக்கு ஓட்டும்படி தேர்தலின்போது தர்மேந்திரா வலியுறுத்தி வந்துள்ளார். வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் காலை, ராஜாவிடம் ஓட்டு போட்டது பற்றி தர்மேந்திரா கேட்டுள்ளார். அதற்கு அவர், காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டதாக அசால்ட்டாக பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸுக்கு ராஜா ஓட்டுப்போட்டதை கேட்டதும் தர்மேந்திராவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அப்போது, திடீரென பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜாவை நோக்கி சுட்டுள்ளார். இதில், ராஜா காயமடைந்தார். ராஜாவின் தாயாரும் துப்பாக்கிச் சூட்டில் லேசான காயமடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து தர்மேந்திரா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது தாயாருக்கும் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தர்மேந்திரா துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரிந்தது. அவர் பயன்படுத்தியது உரிமம் இல்லாத சட்டவிரோத துப்பாக்கி என்பதும் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து நலமாக இருப்பதாக அவரது தாயார் புல்மதி தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவாளரின் இந்த வெறிச் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications