குண்டர் சட்டம், பார் திறப்பு, மாட்டிறைச்சி தடை- காஷ்மீர் பாணியில் லட்சத்தீவுகளிலும் பாஜக தீவிரம்
கவரெட்டி: லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் அடுத்தடுத்து திணிக்கப்படும் புதிய சட்டங்கள் நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மைகளை அழித்த அதே பாணியில்தான் லட்சத்தீவுகளையும் மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளது என குற்றம்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சிகள்.
Recommended Video
அரபிக் கடலில் 36 தீவுகளை உள்ளடக்கியது லட்சத்தீவுகள் எனும் யூனியன் பிரதேசம். இந்த தீவுகளின் மொத்த மக்கள் தொகை 1 லட்சத்துக்கும் குறைவுதான். நாடு விடுதலை அடைந்த போது சென்னை மாகாணத்தின் ஒருபகுதியாகவே லட்சத்தீவு இருந்தது.
மாநிலங்கள் மறுசீரமைப்பில்தான் லட்சத்தீவுகள் பிரிக்கப்பட்டன. 1973-ம் ஆண்டு முதல் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசமாக உருமாறியது. அரபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கான முக்கியதளமாக லட்சத் தீவுகளின் கரவெட்டி விளங்குகிறது.
லட்சத்தீவின் பின்னணி
லட்சத்தீவுகளைப் பொறுத்தவரை கேரளாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டவர். லட்சத் தீவுகளில் மிகப் பெரும்பான்மையினராக இஸ்லாமியர்களே உள்ளனர். இங்கு ஆட்சி மொழியாக மலையாளம், ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளும் இடம்பெற்றுள்ளன. லட்சத்தீவுகளின் பிரதான தொழிலே மீன்பிடித்தலும் மீன்பிடி சார்ந்தவையும்தான். அடுத்ததாக தென்னை சார் தொழில்கள்.
பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள்
இங்கே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் பெரும்பாலான தீவுகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவைப் போலவே மாட்டிறைச்சி இங்கு பிரதான உணவாகும். பொதுவாக லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசம் அமைதியான தீவுப் பகுதியாக இருந்து வந்தது.
பாஜகவின் பிரபுல் பட்டேல்
ஆனால் கடந்த ஆண்டு மத்திய அரசின் நிர்வாகியாக பாஜகவின் பிரபுல் பட்டேல் என்பவர் நியமிக்கப்பட்டார். பொதுவாக அரசு அதிகாரிகள் நியமிக்கப்படும் இப்பதவிக்கு பாஜக அரசியல் கட்சியைச் சேர்ந்தவரை நியமித்தது மத்திய அரசு. அவர் பொறுப்பு ஏற்ற போது, மத்திய குடியுரிமை சட்ட திருத்தமான சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமான காலம். அதனால் அந்த போராட்டங்களை ஒடுக்குவதாக கூறி, எதற்கு கைது செய்யப்பட்டாலும் குண்டர் சட்டம் பாயும் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டது.
அரசு பணிகள் பறிப்பு
அதேபோல் அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. லட்சத்தீவுகளில் காலம் காலமாக இயங்கி வந்த தொழில் நிறுவனங்களின் இடங்களை குஜராத்தியர்கள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர். கொச்சி துறைமுகத்துடன் மேற்கொண்டிருந்த வர்த்தகங்கள் இனி மங்களூரு துறைமுகத்துடன்தான் நடக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு வருகிறது.
மதுபான பார்கள் திறப்பு
அத்துடன் மதுபான பார்களை திறக்க அனுமதித்துள்ள புதிய லட்சத்தீவுகள் அரசு, மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது. அதாவது லட்சத்தீவுகளின் வாழ்வியல் கலாசார பண்பாட்டு நடைமுறைகளில் கை வைத்திருக்கிறது. இத்தகைய அடுத்தடுத்த ஒடுக்குமுறைகள் உச்சத்தை தொட்டிருப்பதால் இப்போது லட்சத்தீவுகளைப் பாதுகாக்கும் போராட்டம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன.
காஷ்மீர் பாணி?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு குறைந்தபட்சமான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர மக்களின் பண்பாடு, கலாசார தளங்களிலும் மத்திய பாஜக அரசு கை வைத்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக்கியது. இப்போது காஷ்மீர் பாணியில்தான் எங்களது லட்சத்தீவையும் வேட்டையாடுவதில் பாஜக முனைப்பாக இருக்கிறது என்று குமுறுகின்றனர் லட்சத்தீவுவாசிகள்.