ஒடிசா முதல்வர் நாற்காலியில் தர்மேந்திர பிரதான் இல்லையா? பாஜக மேலிடம் போடும் கணக்கு என்ன?
புவனேஸ்வர்: ஒடிசா மாநில பாஜக முதலமைச்சராக தர்மேந்திர பிரதான் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தீவிரமாக அடிபட்டன. ஆனால், பாஜக மேலிடம் வேறொரு கணக்கைப் போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றனர்.

ஒடிசாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 74 சீட்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், ஒடிசாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக. 2000ஆம் ஆண்டு முதல் 5 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முதல் முறையாக பாஜக ஆட்சி: நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சியை தோற்கடித்து, ஒடிசாவில் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது பாஜக. 5 முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது பாஜக. இதையடுத்து ஒடிசாவின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒடிசா மாநில பாஜகவின் முக்கிய பிரமுகர்களில், 7 தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் ரேஸில் உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் சிட்டிங் எம்.பியுமான ஜுவல் ஓரம், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, பாஜக தலைவர் தர்மேந்திர பிரதான், ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல், ஒடிசா எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயநாராயண் மிஸ்ரா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஷ் முர்மு ஆகியோர் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளனர்.
தர்மேந்திர பிரதான்: தர்மேந்திர பிரதான் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2000ஆம் ஆண்டு எம்.எல்.ஏவாகவும், 2004ஆம் ஆண்டு எம்.பியாகவும் வெற்றி பெற்றவர். 2009ல் தோல்வி அடைந்ததால் மாநிலங்களவை எம்.பி ஆனார். பீகார், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் பாஜக பொறுப்பாளராக இருந்துள்ளார்.
ஜுவல் ஓரம்: சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் ஜுவல் ஓரம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வர் பதவிக்கான ரேஸில் அவர் முன்னிலையில் இருப்பார் என்ற யூகங்கள் எழுந்த நிலையில், தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை, ஆனால் அந்த பணியை தனக்கு வழங்கினால் பணியாற்றுவேன் என்று ஓரம் கூறியுள்ளார்.
இவர்கள் தவிர அபராஜிதா சாரங்கி, பிரதாப் சாரங்கி ஆகிய எம்.பிக்களும் முதல்வர் பதவிக்கான பேச்சில் உள்ளனர். ஆனால், பாஜக தற்போது மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணி ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழலில், எம்.பியை இழக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தர்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம் ஆகியோர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
“விகே பாண்டியனை குறை சொல்ல வேண்டாம்.. அவர் எனது அரசியல் வாரிசு அல்ல”.. நவீன் பட்நாயக் பேட்டி!
தர்மேந்திர பிரதானின் பின்னணி மற்றும் நிர்வாக அனுபவம் ஆகியவை அவருக்கு அதிக வாய்ப்பைத் தருகிறாது. தர்மேந்திர பிரதானின் தொகுதியான சம்பல்பூர் மாநிலத்தில் பாஜகவுக்கு பாதுகாப்பான தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், அவர் தேர்வு செய்யப்பட்டால், ஒடிசாவில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கும், என்பதால் பாஜக மேலிடம் யோசிப்பதாகத் தெரிகிறது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள மிகப்பெரிய பூங்காவான ஜனதா மைதானத்தில் புதிய முதலமைச்சர் பதவியேற்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. புதிய முதலமைச்சருக்கு ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications