ம.பி.யில் 27 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்-வாக்கு வேட்டைக்காக ராமர் கோவில் ரதயாத்திரையை நடத்தும் பாஜக
போபால்: மத்திய பிரதேசத்தில் 27 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக ராமர் கோவிலை முன்வைத்து ரத யாத்திரை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவில் ஐக்கியமாகினர் ஜோதிராதித்யா சிந்தியாவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும். சிந்தியா ஆதரவு 27 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசு கவிழ்ந்து பாஜக அரசு பதவியேற்றது. அந்த 27 தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

இத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலுடன் இணைந்து மத்திய பிரதேசத்தின் 27 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் வளர்ச்சியைத்தான் தேர்தல் பிரசாரமாக முன்னிறுத்துவோம் என்கிறது. ஆனால் பாஜக வட்டாரங்களோ, மத்திய பிரதேசத்தில் 27 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் ரத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனராம்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கல் எடுத்துச் செல்கிறோம் என்ற பெயரில் இந்த ரத யாத்திரையை ஒவ்வொரு தொகுதியாக நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. இப்படி செய்வதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்துவிட முடியும் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால் பாஜக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications