Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தல் வெற்றிக்கு டீசராம்.. அருணாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய பாஜக!

Subscribe to Oneindia Tamil

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 31 இடங்கள் தேவை. அங்கு ஏற்கனவே போட்டியின்றி பாஜக 10 இடங்களை வென்ற நிலையில், இப்போது மொத்தமாக 46 இடங்களை வென்றுள்ளது பாஜக. பல காலமாக அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸை 2019ல் அகற்றிய பாஜக, இப்போது மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றி லோக்சபா தேர்தல் வெற்றியின் டீசர் என்கிறார்கள் பாஜகவினர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.

arunachal pradesh assembly election 2024 BJP Congress arunachal pradesh 2024

இந்நிலையில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் ஜூன் 2 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு மாநில சட்டமன்ற பதவிக்காலம் ஜூன் 2 ஆம் தேதியான இன்றே முடிவடைவதால் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் பெமா காண்டு தலைமையிலான பாஜக அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. இவரே இந்தியாவின் இளம் வயது முதல்வர் ஆவார். இங்கு மொத்தம் 60 எம்.எல்.ஏ சீட்டுகள் உள்ள நிலையில் ஏற்கனவே 10 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடைசி நேரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு 50 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏற்கனவே 10 இடங்களை பெற்று விட்ட பாஜக இன்னும் 21 இடங்களை பிடித்தால் ஆட்சி அமைத்து விடும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 76.44 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 50 தொகுதிகளுக்கும் இன்று காலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில், 41 இடங்களை பாஜக பிடித்திருந்தது. ஐக்கிய ஜனதா தளம் ஏழு இடங்களையும், தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களையும், காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களையும், அருணாச்சல் மக்கள் கட்சி ஒரு இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து அரங்கேறிய கட்சித்தாவல் நிகழ்வுகளால், ஆளும் பாஜகவின் பலம் 48 ஆக உயர்ந்தது.

2014 ல் அருணாசல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தது. அப்போது பாஜக 11 இடங்களை வென்றிருந்தது. அதற்கு முன்னதாக 2009 தேர்தலிலும் காங்கிரஸ் 42 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. அப்போது பாஜக பெற்றிருந்த சீட்கள் 3 மட்டுமே.

2004 அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் 34 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. 1999 சட்டசபை தேர்தலில் 53 இடங்களில் வென்றிருந்தது காங்கிரஸ் கட்சி. 1995ல் 43 சீட்கள், 1990ல் 37 சீட்களை காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியை பிடித்திருந்தது.

1984 வரை அருணாசல பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகள் மட்டுமே இருந்தன. 1984 சட்டசபை தேர்தலில் அவற்றில் 21 சீட்களை பிடித்து ஆட்சி அமைத்தது காங்கிரஸ். 1980 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், அருணாச்சல் மக்கள் கட்சியும் தலா 13 இடங்களைப் பிடித்தன. சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது காங்கிரஸ்.

1978 தேர்தல் தான் அருணாசல பிரதேசம் மாநிலமாக சந்தித்த முதல் தேர்தல். அப்போது மொத்தமுள்ள 30 இடங்களில் ஜனதா கட்சி 17 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பின்னர் படிப்படியாக நிலைமை மாறி காங்கிரஸ் கட்சி அருணாசல பிரதேசத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்த நிலையில் தான் கடந்த 2019 சட்டசபை தேர்தலில் காங்கிரஸை முதல் முறையாக வீழ்த்தியது பாஜக. இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப கட்டத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே போட்டியின்றி 10 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள பாஜக, மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 சட்டசபை தொகுதிகளில் 46 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மற்றொரு மாநிலமான சிக்கிம்மில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32 சட்டசபை தொகுதிகளில் 31 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 2 மாநிலங்களிலுமே, அந்தந்த கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துள்ளன. இன்று அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி, லோக்சபா தேர்தல் முடிவுகளிலும் தொடரும் என்கிறார்கள் பாஜகவினர். வரும் ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+